அமேசான் மாமன்றம்: கல்வி, இயற்கையைப் பாதுகாத்தல்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
வத்திக்கானில் நடைபெற்றுவரும் அமேசான் உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்வுகள் பற்றி, அக்டோபர் 17 இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில், பகிர்ந்து கொண்ட நான்கு அமேசான் பகுதி வல்லுனர்கள், அமேசான் பகுதியில், கலாச்சாரக் கல்வியின் முக்கியத்துவம், மற்றும், இயற்கையைப் பாதுகாத்தல் குறித்த கருத்துக்களை வலியுறுத்தினர்.
Leah Rose Casimero
பூர்வீக இனத்தவரின் உரிமைகள், அவர்களின் ஆன்மீகம் போன்றவற்றில் வல்லுனரான, கயானா நாட்டு Leah Rose Casimero அவர்கள், பூர்வீக இன மக்களின் வருங்காலத்திற்கு அம்மக்களே பொறுப்பேற்கவேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும், அமேசான் பகுதி குழந்தைகளுக்கு கலாச்சாரம், பாரம்பரிய அறிவு, மொழி ஆகியவற்றில் கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
Wapichan இனத்தைச் சேர்ந்த Casimero அவர்கள் பேசுகையில், பூர்வீக இன மக்களின் குரல்கள் பலநேரங்களில் கேட்கப்படுவதில்லை, ஆனால், இம்மாமன்றத்தில், மக்கள் ஒருவர் ஒருவரை மதித்து, ஒருவர் ஒருவருக்குச் செவிசாய்த்து வருகின்றனர் என்று பாராட்டு தெரிவித்தார்.
Patricia Gualinga
ஈக்குவதோர் நாட்டு Kichwa இனத் தலைவரான Patricia Gualinga அவர்கள் பேசுகையில், உலக சமுதாயம் அனைத்தின் நன்மைக்காக, அமேசானைப் பாதுகாப்பதற்கு, நிறுவனமாக, அர்ப்பண நடவடிக்கைகள் அவசியம் என்று கூறினார்.
Justino Sarmento Rezende
அமேசான் பூர்வீக இன மக்களின் ஆன்மீகம் மற்றும், பண்பாட்டுமயமாக்கலில் வல்லுனரான சலேசிய சபையின் அருள்பணி Justino Sarmento Rezende அவர்கள் தன் கருத்துக்களைத் தெரிவிக்கையில், ஒரு புதிய முகத்துடன் அமைக்கப்படும் அமேசான் திருஅவை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
Felicio de Araujo Pontes Junior
பிரேசிலில் பூர்வீக இன மக்களின் உரிமைக்காக உழைக்கும் மருத்துவர் Felicio de Araujo Pontes Junior அவர்கள், அமேசானில் இடம்பெறும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
அமேசானில் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்படுகிறது, அமேசான் மழைக்காடுகள், பொருளாதார விவகாரமாக மாறி வருகின்றன, ஆனால், பூர்வீக இன மக்கள், இந்தக் காடுகளின் பாதுகாவலர்கள், முன்னேற்றம் என்ற பெயரில், மனித சமுதாயம், சூழலியல் அமைப்புக்களை அழிக்க முடியாது என்று, மருத்துவர் Felicio Junior அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்