அணு ஆயுதத் தடை நடவடிக்கைக்கு திருப்பீடம் ஆதரவு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்
அணு ஆயுதங்கள் அதிகரிப்பு மற்றும், அவற்றை ஊக்குவித்தலைத் தடைசெய்வதற்கும், அணு ஆயுதகளற்ற உலகை உருவாக்குவதற்கும், குறிப்பிடத்தக்க விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும், உலக அணு சக்தி நிறுவனத்திற்கு, திருப்பீடம் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில், செப்டம்பர் 16, இத்திங்களன்று நடைபெற்ற, உலக அணு சக்தி நிறுவனத்தின் 63வது கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், இவ்வாறு கூறினார்.
அணு ஆயுதங்களைத் தடைசெய்யும் நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகின்றது என்றும், அணு சக்தி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படும் கலாச்சாரத்தைப் பேணி வளர்ப்பதற்கும், அணு தொழில்நுட்பத்தை அமைதியான வழிகளுக்குப் பயன்படுத்துவதை முன்னேற்றுவதற்கும் இந்நிறுவனம் அதிகமாக உதவியுள்ளது என்றும், பேராயர் காலகர் அவர்கள் கூறினார்.
அணு ஆயுதங்கள், சூழலியலைப் பெருமளவில் அழிக்கும் ஆயுதங்கள் என்பதில் உறுதியாயிருக்கும் திருப்பீடம், முழுவதும் அணு ஆயுதகளற்ற உலகை உருவாக்கும் நோக்கத்தில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதையும், பேராயர் காலகர் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்