கம்போடியா குழந்தைகளுக்கு திருத்தந்தை மருத்துவமனை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கம்போடியா நாட்டில் உள்ள குழந்தைகளின் மருத்துவ உதவிகளை மேன்மைப்படுத்தும் நோக்கத்துடன், உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, கத்தோலிக்க நல பராமரிப்பு குழுமம் ஆகியவை இணைந்து, அந்நாட்டில், குழந்தைகளுக்கென நிறுவப்படும் திருத்தந்தையின் மருத்துவமனைக்கு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கம்போடியாவின் அரசு அதிகாரிகளோடும், அங்குள்ள திருப்பீடத் தூதரகத்துடனும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பயனாக, உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம், ஜூன் 18, இச்செவ்வாயன்று, Phnom Penh அப்போஸ்தலிக்க பிரதிநிதியான Olivier Schmitthaeusler அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
கம்போடியாவின் தலைநகர், Phnom Penhலிருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள Takeo என்ற ஊரில் அமைக்கப்படவிருக்கும் குழந்தைகள் மருத்துவமனை, உலக அளவில் தரம் வாய்ந்த மருத்துவ உதவிகள் குழந்தைகளுக்குக் கிடைக்க வழிவகுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினரின் சராசரி வயது 22 என்பது, அந்நாட்டைக் குறித்த நேர்மறையான ஓர் உண்மை என்றாலும், அங்கு நிலவும் வறுமையின் காரணமாக, அந்நாட்டில் வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது கூறப்படுகிறது.
1 கோடியே 70 இலட்சத்திற்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட கம்போடியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 23,000 மட்டுமே என்றாலும், கிறிஸ்தவ சமுதாயம் அந்நாட்டில் ஆற்றிவரும் கருணைப் பணிகளுக்கு மற்றுமொரு சான்றாக, Takeo பகுதியில் நிறுவப்படும் திருத்தந்தையின் மருத்துவமனை திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்