கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 

கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 29வது கூட்டம்

இதுவரை நடைபெற்ற 29 ஆலோசனைக் கூட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள திருத்தூது சட்ட வரைவுகளுக்கு Praedicate Evangelium என்ற தற்காலிக தலைப்பு வழங்கப்பட்டுள்ளது - செய்தித்துறை தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப்பட்ட 9 கர்தினால்கள் அடங்கிய குழுவின் மூன்று கர்தினால்கள் தங்கள் பணியை நிறைவு செய்த நிலையில், 6 கர்தினால்கள் அடங்கிய குழு, ஏப்ரல் 8 இத்திங்கள் முதல் 10, இப்புதன் முடிய தன் 29வது கூட்டத்தை திருப்பீடத்தில் மேற்கொண்டது.

புதன் கிழமை காலை அமர்வைத் தவிர, இம்மூன்று நாள்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் 9 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், பிற்பகல் 4.30லிருந்து, 7 மணி வரையிலும் நடைபெற்ற அமர்வுகள் அனைத்திலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார் என்று திருப்பீடச் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

இதுவரை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள திருத்தூது சட்ட வரைவுகளுக்கு Praedicate Evangelium என்ற தற்காலிக தலைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, ஜிசோத்தி அவர்கள் அறிவித்தார்.

இந்தச் சட்ட வரைவுகள், அனைத்து ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டு முறை அவைகள், திருப்பீடத்தின் அனைத்துத் துறைகள், துறவு சபைத் தலைவர்களின் அவைகள் மற்றும் ஒரு சில பாப்பிறை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களது பரிந்துரைகள் திரட்டப்படும் என்று, ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

சிறியோரின் பாதுகாப்பு திருப்பீட அவை அண்மையில் மேற்கொண்ட ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தைக் குறித்தும், பெண்கள், திருப்பீடத் துறைகளில் இன்னும் முக்கியமான பொறுப்பை மேற்கொள்வது குறித்தும் விவாதங்கள் நடந்தன என்று ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

கர்தினால்களின் அடுத்த ஆலோசனைக் கூட்டம், வருகிற ஜூன் மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2019, 15:08