சிரியாவில் போர் நிறுத்தம் வேண்டி, குழந்தைகளுடன் இணைந்து செபிக்கும் Aid to the Church in Need அமைப்பினர் சிரியாவில் போர் நிறுத்தம் வேண்டி, குழந்தைகளுடன் இணைந்து செபிக்கும் Aid to the Church in Need அமைப்பினர்  

விருதுபெறும் Aid to the Church in Need அமைப்பு

நெருக்கடியானச் சூழல்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், ஏனையோருக்கும் உதவிகள் செய்துவரும் Aid to the Church in Need அமைப்பினருக்கு, Path to Peace Award என்ற விருது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Path to Peace Award, அதாவது, அமைதிக்குப் பாதை என்ற விருது, இவ்வாண்டு, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பிற்கு வழங்கப்படும் என்று, Path to Peace அறக்கட்டளையின் தலைவரும், ஐ.நா. அவைக் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்பவருமான, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் அறிவித்தார்.

நெருக்கடியானச் சூழல்களில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், ஏனையோருக்கும் உதவிகள் செய்துவரும் Aid to the Church in Need அமைப்பினருக்கு, இந்த விருது, மே மாதம் 22ம் தேதி வழங்கப்படும் என்று பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலர்களான Boutros Boutros-Ghali மற்றும் Kofi Annan, போலந்து நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் Lech Walesa, சிரியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் மாரியோ செனாரி ஆகியோர், Path to Peace அறக்கட்டளை வழங்கிவரும் இவ்விருதைப் பெற்றவர்களில், முக்கியமானவர்கள்.

1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Aid to the Church in Need அமைப்பு, தற்போது, 140 நாடுகளில் 5,500க்கும் மேற்பட்ட உதவித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளது என்பதும், 2011ம் ஆண்டிலிருந்து, மத்தியக் கிழக்குப் பகுதியில் இவ்வமைப்பினர் பெரும் உதவிகள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

கடந்த ஆண்டு மட்டும், இவ்வமைப்பினர், 2,470 ஆலயங்களைக் கட்டியெழுப்பியுள்ளனர் என்பதும், 10,000 அருள்பணியாளர்கள், 11,000 துறவியர் மற்றும் 14,000 மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்துள்ளனர் என்பதும், மேலும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2019, 15:30