தேடுதல்

அல்ஜீரியாவில் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு (கோப்பு படம்) அல்ஜீரியாவில் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு (கோப்பு படம்)  

8 மறைசாட்சிகள், 6 இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு

அருள்பணியாளர் Alfredo Cremonesi அவர்கள், மியான்மார் நாட்டின் Donoku என்ற கிராமத்தில், 1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி விசுவாசத்திற்காக மறைசாட்சியாக இறந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்துவதற்கென, புண்ணிய நற்பண்புகளைக் கொண்ட எட்டு மறைசாட்சிகள் மற்றும் ஆறு இறைஊழியர்களின் வாழ்வு விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதர் மற்றும் அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தும் பணிகளையாற்றும் திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், மார்ச் 19, இச்செவ்வாய் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து இந்த விவரங்களைச் சமர்ப்பித்தார். 

இஸ்பெயின் நாட்டில் 1847ம் ஆண்டு பிறந்து, 1940ம் ஆண்டில் காலமான, வணக்கத்துக்குரிய அருள்சகோதரி Maria Emilia Riquelme y Zayas அவர்களின் பரிந்துரையால் ஒரு புதுமை நடைபெற்றுள்ளது. இவர், திருநற்கருணை மற்றும் அமல மரியின் மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தவர்.

1950க்கும், 1970ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இறைஊழியர்களான Valerio Traiano Frenţiu, Vasile Aftenie, Giovanni Suciu, Tito Livio Chinezu, Giovanni Bălan, Alessandro Rusu, Giulio Hossu ஆகிய ஏழு ஆயர்கள், உருமேனியா நாட்டில், பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள்.

PIME எனப்படும், பாப்பிறை மறைப்பணிகள் சபையின் இத்தாலிய அருள்பணியாளர் Alfredo Cremonesi அவர்கள், மியான்மார் நாட்டின் Donoku என்ற கிராமத்தில், 1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி விசுவாசத்திற்காக மறைசாட்சியாக இறந்தார். இவர், 1902ம் ஆண்டு இத்தாலியின் Ripalta Guerinaல் பிறந்தவர்.

திருஇதய கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய, இத்தாலிய மறைமாவட்ட அருள்பணியாளர் Francesco Maria Di Francia, (19 பிப்.1853 – 22 டிச.1913);

புனித பிரான்சிஸ் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவிய, இத்தாலியரான Maria Hueber (22 மே 1653 – 31 ஜூலை,1705);

நம் வியாகுல அன்னைமரியின் புதல்விகள் சபையை நிறுவிய, இத்தாலியரான Maria Teresa Camera (8 அக், 1818 – 24 மார்ச் 1894);

சிறிய ஏழைச் சகோதரிகள் சபையின் துணை நிறுவனரான, இத்தாலியரான Maria Teresa Gabrieli (13 செப்.1837 – 6 பிப்.1908);

மனுஉரு எடுத்த இறைவார்த்தையின் பிரான்சிஸ் மறைப்பணியாளர் சகோதரிகள் சபையை ஆரம்பித்த இத்தாலியரான Giovanna Francesca dello Spirito Santo (14,செப்.1888 – 21 டிச.1984) ஆகிய இறைஊழியர்களின் புண்ணிய நற்புண்புகள் குறித்த விவரங்களை திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2019, 15:20