ஆயர் மாமன்றம் குறித்த தகவல்கள் வலைத்தளங்களில் உடனுக்குடன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் உலக ஆயர் மாமன்றம் தொடர்புடைய செய்திகள், படங்கள், காணொளிகள் என, அக்டோபர் மாதத்தில் மட்டும், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகள், சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் மாமன்ற நிகழ்வுகள் குறித்து சமூக வலைத்தளம் வழியாக பகிரப்பட்டவைகள் பற்றி எடுத்துரைத்த திருப்பீட தகவல் துறை, இம்மாதத்தில் #Synod என்ற ‘ஹாஷ்டாக்’குடன் 1400 டுவிட்டர்கள், 6 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மாமன்றத் தந்தையர்கள் வெளியிடும் கருத்துக்கள், நேரடியாக, ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்ச், இத்தாலியம் என நான்கு மொழிகளில், தினமும் 15 டுவிட்டர்களாக வெளியிடப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தது.
சமூக வலைத்தளங்களில் ஆயர் மாமன்ற நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை உலகின் பல்வேறு பகுதிகளின் இளையோர், குறிப்பாக, அமெரிக்க, மற்றும், ஐரோப்பிய இளையோர், ஆர்வமுடன் பகிர்ந்து வந்ததாகவும், இரஷ்யா மற்றும் சைனாவின் இளையோரிடையே அதிக ஆர்வத்தைக் காண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயர் மாமன்ற நிகழ்வுகளில் சமூக வலைத்தளங்கள் வழி ஆர்வம் காட்டிய இளையோர், 18 முதல் 34 வயதிற்கு உட்பட்டோர் எனவும், திருப்பீட தகவல் துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்