தேடுதல்

இளையோருக்கென எழுதப்பட்ட மடலை, கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் வாசித்தல் இளையோருக்கென எழுதப்பட்ட மடலை, கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் வாசித்தல் 

இமயமாகும் இளமை - ஒளிமயமான எதிர்காலமாய் திகழுங்கள்

திருஅவை, உங்கள் தாய்; அவர் உங்களை கைவிடமாட்டார்; தூய ஆவியாரின் காற்று வீசும் திசையில் உங்களை வழிநடத்த, திருஅவையாகிய தாய் உங்களுடன் துணை வருகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அக்டோபர் 28, கடந்த ஞாயிறன்று, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்ற மாமன்றத் தந்தையர் இணைந்து, இளையோருக்கென ஒரு மடலை வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 28, இஞ்ஞாயிறன்று, நடைபெற்ற மாமன்ற நிறைவுத் திருப்பலியின் இறுதியில், கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் இம்மடலை வாசித்து, இளையோரிடம் வழங்கினார். இம்மடலில், மாமன்றத் தந்தையர் வெளிப்படுத்தியுள்ள எண்ணங்கள் இதோ:

மாமன்றத் தந்தையர்களாகிய நாங்கள், நம்பிக்கை, பற்றுறுதி, மற்றும் ஆறுதல் ஆகியவற்றை வழங்கும் சொற்களுடன் இளையோரிடம் பேச விழைகிறோம். உங்கள் குரல்கள், மகிழ்வுடன் நீங்கள் எழுப்பிய ஒலிகள், மற்றும், உங்கள் அமைதியான தருணங்கள் வழியே, 'என்றும் இளமையான கிறிஸ்து'வின் குரலை, இந்நாள்களில்,  நாங்கள் கேட்டோம்.

இப்போது உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விழைகிறோம். வாழ்வின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம், உங்கள் கனவுகளை நனவாக்கி, உங்கள் வரலாற்றை வடிவமைக்கும் என்பதை உறுதியாய் நம்புகிறோம்.

எங்களுடைய பலவீனம், தவறுகள், பாவங்கள் ஆகியவை, திருஅவைமீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குத் தடையாக இருக்கக்கூடாது. திருஅவை, உங்கள் தாய்; அவர் உங்களை கைவிடமாட்டார்; தூய ஆவியாரின் காற்று வீசும் திசையில் உங்களை வழிநடத்த, திருஅவையாகிய தாய் உங்களுடன் துணை வருகிறார்.

தன் ஒரே மகன் இயேசுவை அளிக்கும் அளவுக்கு கடவுள் அன்புகூர்ந்த இவ்வுலகம், பொருள்கள், குறுகிய கால வெற்றிகள், இன்பம் ஆகியவற்றிலேயே கருத்தாய் இருக்கும்போது; வலுவிழந்தோரை இவ்வுலகம் நசுக்கும்போது; அன்பு, அழகு, உண்மை, நீதி ஆகியவற்றின் மீது, இவ்வுலகின் கவனத்தைத் திருப்பும்வண்ணம், அதை நீங்கள் உயர்த்தவேண்டும்.

உங்களில் ஒரு சிலருடனும், இன்னும், உங்கள் செபம் மற்றும் அன்பு ஆகியவற்றோடும் நாங்கள் ஒருமாத காலம் இணைந்து பயணித்தோம். உங்களோடு இணைந்து, உலகின் ஒவ்வொரு பகுதியிலும், மறைபரப்புப் பணியாளர்களாக செல்ல விழைகிறோம்.

திருஅவைக்கும், இவ்வுலகிற்கும், உங்கள் ஆர்வம் மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. மிகவும் வலுவிழந்தோர், வறியோர், மற்றும் வாழ்க்கையில் காயமடைந்தோர், ஆகியோரை, உங்கள் பயணத்தின் துணையாளர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

நீங்களே நிகழ்காலம்; ஒளிமயமான எதிர்காலமாய் திகழுங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2018, 16:10