பதட்ட நிலைகள் இடம்பெறும் இடங்களில் அமைதி நிலவ செபிக்க
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உகாண்டாவில் பள்ளி ஒன்று தாக்கப்பட்டதில் 42 பேர் வரை உயிரிழந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட உகாண்டாவின் Lhubiriha என்ற இடத்தில் ADF என்ற புரட்சிக் குழுவால் நடத்தப்பட்டத் தாக்குதலில் பெரும்பான்மையாக மாணவர்கள் உட்பட 42 பேர் வரை கொல்லப்பட்டுள்ளது குறித்து ஜூன் 18, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரின் பதட்ட நிலைகள் தொடர்ந்து இடம்பெறும் இடங்களில் அமைதி நிலவ அனைவரும் இணைந்து செபிக்குமாறு அழைப்புவிடுத்தார்.
காங்கோ ஜனநாயக குடியரசின் எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும் இந்த உகாண்டா பள்ளி மீது தாக்குதல் நடத்தியப் புரட்சியாளர்கள் காங்கோ குடியசிற்குள் தப்பியோடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
42 பேர்வரைக் கொல்லப்பட்டும், எட்டு பேர் படுகாயமுடன் மீட்கப்பட்டும் உள்ள நிலையில், பல பள்ளிச் சிறுமிகளை புரட்சியாளர்கள் கடத்தியும் சென்றுள்ளனர். சில உடல்கள் எரிக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு கல்வி நிலையம் மீதான இந்த கொடூரத் தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டாரெஸ், ஆப்ரிக்க கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோர் தங்கள் வன்மையானக் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்