தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை – ஹங்கேரியின் புனிதத்துவ வரலாறு

ஹங்கேரி மக்கள் தங்கள் ஆழமான கிறிஸ்தவ வேர்களை உணர்ந்தவர்களாக, நம்பிக்கையின் வருங்காலத்திற்கு தங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மே மாதம் 3ஆம் தேதி புதன்கிழமையன்று, காலையில் வானம் கறுத்திருக்க, உரோம் நகரத்தில் மழைபெய்யுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. இருப்பினும், திருத்தந்தையின் புதன் மறைப்போதகத்திற்கான ஏற்பாடுகள் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த நிலையில், காலை எட்டரை மணிக்கெல்லாம் வானம் தெளிவாக சூரிய ஒளியுடன் தோன்ற, திருத்தந்தையின் மறைக்கல்வி போதனை உள்ளூர் நேரம் 9 மணிக்குத் துவங்கியது. முதலில் புனித பேதுருவின் முதல் திருமடலின் முதல் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.....

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். (1 பேதுரு 1,3.4a.6-7)

அதன்பின் திருத்தந்தையும் தான் அண்மையில், அதாவது ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஹங்கேரியில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நான் என் அண்மை ஹங்கேரி திருப்பயணத்தின்போது மிகவும் உறுதியான, தைரியமான மக்களைச் சந்தித்தேன். இவர்கள் தங்கள் ஆழமான கிறிஸ்தவ வேர்களை உணர்ந்தவர்களாக நம்பிக்கையின் வருங்காலத்திற்கு தங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுகின்றனர். இவர்களின் நீண்ட கால புனிதத்துவ வரலாறு, 20ஆம் நூற்றாண்டில் தன் மகுடத்தைச் சூட்டியது. அதாவது, நாத்ஸி மற்றும் கம்யூனிச காலத்தின்போது விசுவாசிகள் அனுபவித்த சித்ரவதைகளின் சான்று வாழ்வு இந்த மணிமகுடத்தைத் தருவதாக இருந்தது. மக்களிடையே அமைதி மற்றும் இணக்கவாழ்வின் பாலங்களைத் தொடர்ந்துக் கட்டியெழுப்ப வேண்டும் என ஹங்கேரியும் ஐரோப்பா முழுமையும் எதிர்நோக்கும் சவாலை குறித்துக் காட்டுவதாக பாலங்களின் நகரான புதாபெஸ்ட் உள்ளது. இந்நகரில் நான் மனிதாபிமானத்துடன்கூடிய பாலம் கட்டப்பட்டிருப்பதை நேரடியாகப் பார்த்தேன். ஆம், உக்ரைன் நாட்டிலிருந்து வந்த எண்ணற்ற புலம்பெயர்ந்தோரை வரவேற்பதையும், நீடித்து நிற்கக்கூடிய நிலையான ஒரு வருங்காலத்தை உருவாக்கும் அக்கறையுடன், இயற்கையான, மற்றும் மனிதாபிமான ஒரு சூழலை உருவாக்கி வருவதையும் கண்டேன். என் திருப்பயணத்தின் இறுதி நாளில் இடம்பெற்ற திருப்பலிக் கொண்டாட்டத்தில், ஹங்கேரி தலத்திருஅவையின் உயிர்துடிப்பையும், வெவ்வேறு வழிபாட்டுமுறைகள் மற்றும் கிறிஸ்தவ சபைகளை இணைக்கும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பாலத்தை பலப்படுத்துவதற்கான தலத்திருஅவையின் அர்ப்பணத்தையும் கண்டேன்.  இவ்வுலகிலும் நாம் வாழும் சமூகங்களிலும் இணக்க வாழ்வு மற்றும் ஒன்றிப்பின் பாலங்களைக் கட்டியெழுப்ப, விசுவாசத்தில் வேரூன்றியவர்களாக நாமும் அன்புக்குரிய ஹங்கேரி மக்களும் செயல்பட,  ஹங்கேரியின் அரசியான அன்னை மரியா பரிந்துரைக்க வேண்டுமென, அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில் அவரை நோக்கி இறைஞ்சுகிறேன்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை, ஹங்கேரி நாட்டிற்கான தன் அண்மை திருப்பயணம் குறித்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 May 2023, 11:06

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >