தேடுதல்

விமானத்தில் நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் விமானத்தில் நேர்காணல் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உலகம் முழுவதும் போரால் நிரம்பியுள்ளது :திருத்தந்தை பிரான்சிஸ்

ஆயுத வர்த்தகம்தான் உலகிலேயே மிகப்பெரிய கொள்ளை நோய் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம - வத்திக்கான்

முழு உலகமும் போரால் தன்னை அழித்துக்கொண்டு வருகிறது என்றும் இதனை நாம் சரியான நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 5, இஞ்ஞாயிறன்று, தென்சூடானில் தனது திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு உரோமைக்குத் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மற்றும் இறைப்பதம் சேர்ந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் குறித்த கேள்விகளுக்கும் பதிலளித்தார் .

ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்ந்து வரும் வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, வன்முறை ஒரு அன்றாட செய்தியாகிவிட்டது என்றும் தென் சூடானில் இப்போதுதான் அதனைப் பார்த்தோம். ஆனால், வன்முறையை தூண்டும் விதத்தைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுத வர்த்தகம்தான் உலகிலேயே மிகப்பெரிய கொள்ளை நோய் என்று தான் நினைப்பதாகவும், அதனை ஓராண்டிற்கு நிறுத்தினாலே போதும், உலகத்தின் வறுமையைப் போக்கிவிட முடியும் என்று தன்னிடம் ஒருவர் கூறியதாகவும் எடுத்துரைத்தார்.

தென்சூடானின் தலைவர்களிடம் மண்டியிட்டு வேண்டி அமைதிக்கான அந்நாட்டில் வழிகளை மேற்கொள்ள வேண்டுமென நீங்கள் கேட்டுக்கொண்டதுபோல, உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடமும் இவ்வாறு செய்வீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்யா, உக்ரைன் ஆகிய இருநாட்டுத் தலைவர்களையும் சந்திப்பதற்கு நான் திறந்த மனதுடன் காத்திருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

தென்சூடான் காங்கோ நாடுகளிலும் தீய ஆவி அவர்களை பிடித்திருக்கின்றது என்று கருதப்பட்டு ஓரினச்சேர்க்கையாளர்கள் அவர்களின் குடும்பங்களில் வெறுத்தொதுக்கப்படுகின்றனரே. இதுகுறித்து அவர்தம் குடும்பங்களுக்கும், ஆயர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என்று கேள்விக்கு ஓரினச்சேர்க்கைப் போக்குள்ள ஒருவர் இறைநம்பிக்கையாளராக இருந்துக்கொன்று  கடவுளைத் தேடினால், அவரைக்குறித்து தீர்ப்பிடுவதற்கு நான் யார் என்று நான் பிரேசில் நாட்டிலிருந்து திரும்பும் வழியில் கூறியிருக்கிறேன் என்றும், இரண்டாவதாக, அயர்லாந்திலிருந்து திரும்புகையில், இதுகுறித்த ஒரு இளைஞர் எழுதி வெளியிட்ட கடிதத்திற்கு, இப்படிப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்க உரிமை உண்டு; நீங்கள் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என்று கூறியதாகவும் விவரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby. மற்றும் ஸ்காட்லாந்து  கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Iain Greenshields இருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் உடனிருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 February 2023, 14:42