தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் புனித அகுஸ்தின் துறவுசபைகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் புனித அகுஸ்தின் துறவுசபைகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவினர்  (Vatican Media)

நற்செய்தியை வாழ்வின் கையேடாகக் கொண்டிருங்கள் - திருத்தந்தை

சமுதாயம், மறைநூல்களைப் படித்தல், அன்றாட மறைப்பணி, நிகழ்கால உண்மைகள் மற்றும் உடன் வாழும் மனிதர்களில் கடவுளைத் தேட வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் நற்செய்தியை தங்கள் வாழ்வின் கையேடாகக் கொண்டு வாழவேண்டும் என்றும், ஓடுகின்ற தண்ணீர் மற்றும் சாரமுள்ள உப்பை போன்று அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 13 வெள்ளிக்கிழமை வத்திக்கானில் புனித அகுஸ்தின் துறவுசபைகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவினரை சந்தித்துப் பேசியபோது இவ்வாறுக் கூறிய திருத்தந்தை, காலத்தின் சூழ்நிலைகள், இடங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் வாழ்வு எப்போதும் நற்செய்தியின் ஒளியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஓடுகின்ற தண்ணீர் மற்றும் சாரமுள்ள உப்பைப் போன்று அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்றும், இதனால் சோதனையிலிருந்து  நம்மை விலக்கி, கிறிஸ்துவை நமது வாழ்வின் மையமாக மீண்டும் கொண்டு வந்து அவர் மீது நாம் கொண்ட முதல் அன்பை உணர்த்தி ஆற்றலாகவும் வாழ்வாகவும் நம்மில் அவர் அன்பு செயல்படும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அர்ப்பண வாழ்வு வாழ்பவர்கள் கடவுளைத் தேடுவதையே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், கடவுளை சமுதாயத்தில்,  மறை நூல்களைப் படிப்பதில், அன்றாட மறைப்பணியில், உடன் வாழும் மனிதர்களில் நிகழ்காலத்தின்  உண்மைகளில் தேட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை. 

எவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதனாலோ, அல்லது தங்கள் சொந்த பலத்தினாலோ எதிர்காலத்தை உருவாக்குவதில்லை மாறாக சந்தித்தல், உரையாடல், செவிமடுத்தல், போன்றவற்றின் வழியாகவும், ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் வழியாகவும் எதிர்காலத்தை உருவாக்குகின்றோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

திருத்தந்தையுடன் ஆலோசனைக் குழுவினர்
திருத்தந்தையுடன் ஆலோசனைக் குழுவினர்

நினைவாற்றல்

நிகழ்காலத்தை முழுமையாகவும் பயமின்றியும் வாழ நல்ல நினைவாற்றல் உதவும் என்றும், திருத்தூதர் புனித பவுல் கூறுவது போல, வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கிறிஸ்துவை அன்பு செய்வது என்பது அவரது உடலாகிய திருஅவையை அன்பு செய்வதாகும் என்றும், அர்ப்பண வாழ்வு திருஅவையில் பிறந்து திருஅவையோடு வளர்ந்து, திருஅவைக்காக பலன் தரும் வாழ்வு என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

புனித அகுஸ்தினார் கூறுவது போல திருஅவையில் தான் முழு கிறிஸ்துவையும் நாம் கண்டறிகின்றோம் எனவும், கிறிஸ்துவை நேசிப்பது என்பது அவருடைய உடலாகிய திருஅவையை நேசிப்பதாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.

புனித அகுஸ்தின் துறவுசபைகளின் கூட்டமைப்பு

சபையின் பிற கிளைகளை தொண்டுப்பணிகளில் ஒன்றிணைத்தல், நற்செய்தியின் அர்த்தத்தை மதிப்பிடுதல், ஆன்மீக பரிமாணத்தில் உருவாக்கம், ஒருவர் மற்றவர்க்கு உதவுதல், இளையோர் உருவாக்கம், கலாச்சாரத்தின் நிரந்தரம் மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்தல் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு புனித அகுஸ்தினர் துறவு சபைகளின் கூட்டமைப்பு செயல்படுவதாகக் கூறினார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

தனித்து இயங்கும் சபைகளுக்கு இடையே சமநிலையை வளர்க்கும் திறன்களை வளர்த்தல், ஒற்றுமையை உண்மையான செல்வமாகப் பாதுகாத்தல், தனித்து இயங்குதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை தவிர்த்து ஒன்றிணைந்து செயல்படுதல் போன்றவற்றை முக்கியமாகக் கொண்டு செயல்படுகின்றது என்றும் பாராட்டினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2023, 14:32