அமேசான் திருஅவையின் நற்செய்திப் பணிக்கு திருத்தந்தை பாராட்டு
மேரி தெரேசா: வத்திக்கான்
அமேசான் பகுதிக்கும், அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கும் மிகுந்த அர்ப்பணத்தோடு தொடர்ந்து பணியாற்றி வருகின்ற பிரேசில் நாட்டு அமேசான் பகுதி திருஅவை குழுமங்களுக்கு, தன் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அமேசன் பருவமழைக் காடுகள் பகுதியில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை நடத்திவருகின்ற நான்காவது கூட்டத்தில் கலந்துகொள்கின்ற பிரதிநிதிகளுக்கு, ஜூன் 07, இச்செவ்வாயன்று, போர்த்துக்கீசியத்தில் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, இப்பகுதியில் பணியாற்றுகின்ற திருஅவை, ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி என்ற திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்திற்குச் சான்றுபகர்ந்து வருகின்றது என்று கூறியுள்ளார்.
2019ம் ஆண்டில் நடைபெற்ற, அமேசான் பகுதி குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு பிரேசில் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு வந்து, அதில் ஆர்வத்தோடும், உயிர்த்துடிப்போடும் பங்குபெற்ற பிரதிநிதிகளை மகிழ்வோடும் நன்றியோடும் நினைவுகூர்கிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
அனைத்தையும் படைத்த கடவுளின் செயல்களுக்கு, நம்பிக்கையோடு கையளிப்பதற்கு துணிச்சல், மற்றும், திறந்தமனம் கொண்டிருங்கள் என்று ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதியதோர் அர்ப்பணத்தோடு நற்செய்தியை அறிவிப்பதற்கு, இயேசு கிறிஸ்து தம் தூய ஆவியார் வழியாக நமக்குத் தூண்டுதல் தருகிறார் என்றும் கூறியுள்ளார்.
இப்பிரதிநிதிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளிப்பதாகக் கூறியுள்ளதோடு, தனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்