தேடுதல்

திருத்தந்தை: உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது

இயேசு நம்மை ஆசிர்வதிப்பதற்குக் கைம்மாறாக, கடவுளிடமிருந்து நாம் பெறும் அதே வகையான அன்போடு மற்றவரை அன்புகூர வேண்டும் மற்றும், நற்செய்திக்குச் சான்றுகளாய் விளங்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது, மாறாக, சுதந்திரமாக அன்புகூர உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார்.

ஆண்டவருடைய விண்ணேற்றம் திருவிழா பாரம்பரியமாக மே 26 இவ்வியாழனன்று வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டவேளை, பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு முந்திய மே 29, இஞ்ஞாயிறன்று இவ்விழா உலக நாடுகளில் சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவின் நற்செய்தி வாசகத்தை (லூக்.24:46-53) மையப்படுத்தி அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு விண்ணேற்பு அடைவதற்குமுன் கடைசி முறையாக தம் சீடர்களுக்குக் காட்சியளித்தபோது, இரு காரியங்களை அவர்களுக்கு அறிவித்தார் என்று கூறியுள்ளார்.

தூய ஆவியார் எனும் கொடை

இயேசு, தம் சீடர்களுக்கு தூய ஆவியார் எனும் கொடையை அறிவித்தார், பின்னர் அவர் தம் சீடர்களை ஆசிர்வதித்தார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு தம் தந்தையிடம் சென்றபோது மனித சமுதாயத்தை அவர் கைவிட்டுவிடவில்லை, மாறாக, அவர் தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார், அந்த ஆவியார், அவர்களின் பணிகளில் உடனிருந்து, வழிநடத்தி, அவர்களின் ஆன்மீகப் போராட்டத்தில் அவர்களைப் பாதுகாப்பார் என்று எடுத்துரைத்தார்.

இதிலும்கூட இயேசு நம்மீது வைத்துள்ள அன்பைப் பார்க்கிறோம், அவரது பிரசன்னம், நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைத் தேடவில்லை, ஏனெனில் உண்மையான அன்பு எப்போதும் நெருக்கத்தைப் பிறப்பிக்கும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இயேசுவின் விண்ணேற்பு, தூய ஆவியாரில் மனிதகுலம் அனைத்திற்கும் நெருக்கமாக வருவதற்கு அவரை அனுமதித்துள்ளது என்றும், காலம், இடம் என அனைத்து எல்லைகளையும் கடந்து, தூய ஆவியார், இயேசு நம்மில் பிரசன்னமாக இருக்கச் செய்துள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

கடவுளின் ஆசிர்

இயேசு, விண்ணேற்பு அடைவதற்குமுன்னர், சீடர்களை ஆசிர்வதித்தார், இது அருள்பணித்துவ அடையாளம் என்றுரைத்த திருத்தந்தை, நம் வாழ்வில் இயேசு மிகப்பெரிய குரு என்பதை நற்செய்தி நமக்குச் சொல்ல விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இயேசு, விண்ணகத்தில் இறைத்தந்தையோடு இணைந்து நமக்காக ஓர் இடத்தைத் தயார் செய்வதற்கும், அவர் விண்ணேற்பு அடைந்தார் எனவும், அவர் நம்மை ஆசிர்வதிப்பதற்குக் கைம்மாறாக கடவுளிடமிருந்து நாம் பெறும் அதே வகையான அன்போடு மற்றவரை அன்புகூரவேண்டும் மற்றும், நற்செய்திக்குச் சான்றுகளாய் விளங்கவேண்டும் எனவும்  திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2022, 15:16

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >