புச்சா படுகொலைகள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த வேதனை
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் கீவ் தலைநகருக்கு அருகிலுள்ள புச்சா நகர்ப் பகுதியை இரஷ்யப் படைகள் ஆக்ரமித்திருந்தபோது, அப்பாவி பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளது குறித்து தன் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 06, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, தனது அண்மை மால்ட்டா திருத்தூதுப் பயணம் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபின்னர், புச்சா நகர் படுகொலைகள் குறித்துக் குறிப்பிட்டு, உக்ரைனில் இடம்பெறும் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று உருக்கமுடன் அழைப்புவிடுத்தார்.
புச்சா நகரில் எந்த அளவுக்கு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை, அங்கிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இந்த மனிதப் பெருந்துயர் குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்பாவி குடிமக்கள், பெண்கள், மற்றும், வலுவற்ற சிறார் ஆகியோருக்கு எதிராக, மிகப் பயங்கரமான கொடூரங்கள் இடம்பெற்று வருகின்றன, இவற்றில் பலியாகும் அப்பாவிகளின் இரத்தம் விண்ணை நோக்கி அழுகின்றது மற்றும், உதவிக்காக வேண்டுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
மரணம், அழிவு விதைக்கப்படுகின்றன
இந்தப் போர் முடிவுக்கு வரட்டும், ஆயுதங்களின் சப்தங்கள் அடங்கட்டும், மரணத்தையும் அழிவையும் விதைப்பது நிறுத்தப்படட்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 05, இச்செவ்வாயன்று, புச்சா நகரிலிருந்து தான் பெற்ற போரால் கறைபட்ட உக்ரைன் கொடி ஒன்றை திருப்பயணிகளிடம் தூக்கிக் காண்பித்தார்.
சிறார் புலம்பெயர்ந்தோர், போரின் பலன்கள்
அதன்பின்னர், இப்புதன் மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டின் சிறார் புலம்பெயர்ந்தோரை மேடைக்கு அழைத்து, இச்சிறார், போரின் பலன்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களையும், உக்ரைன் மக்களையும் மறந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
நன்மதிப்பு, அமைதிக்காக உழையுங்கள்
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப்பின், அமைதியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் புறக்கணித்து, இன்று வல்லரசுகளுக்கு இடையே போட்டிகள் நிலவுகின்றன எனவும், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திறமையின்மையின் சான்றுகளாக நம்மை ஆக்கியுள்ளது எனவும் உரைத்த திருத்தந்தை, அமைதிக்காக உழைக்குமாறு அழைப்புவிடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்