திருத்தந்தை: உக்ரைன் நாட்டிற்காக ஒன்றிணைந்து மன்றாடுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உக்ரைன் நாட்டின் மீது இரஷ்யா நடத்திவரும் தாக்குதல்கள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு, அந்நாட்டில் அமைதி நிலவ இறைவேண்டல்களை எழுப்புமாறு அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 28, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கம் வழியாகவும், அந்நாட்டிற்காக ஒன்றிணைந்து கடவுளை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“குறிப்பிட்ட ஆதாயங்களைக் கணக்கிடுவது, மற்றும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை வைப்பது ஆகியவற்றைவிட, அமைதிக்காக கலந்துரையாடல்களை மேற்கொள்வது, மிகவும் வலிமையானது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இத்திங்களன்று இடம்பெற்றிருந்தன.
உலகில் போர்கள் நிறுத்தப்படவும், அவற்றால் துன்புறும் அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் அடிக்கடி அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரத்தில் உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதையடுத்து, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்தினால் மால்கம் இரஞ்சித்
மேலும், இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், பாரிஸ் நகரின் பெரிய மசூதியின் தலைவர் Chems-eddine Hafiz அவர்கள் தலைமையில் இருவரும், திருஅவையின் உச்ச நீதிமன்றத்தின் செயலர் ஆயர் Andrea Ripa அவர்களும், பிப்ரவரி 28, இத்திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்