தேடுதல்

பணமும், உலகப்பொருட்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை

நம்மையே மையப்படுத்தி நாம் ஆற்றும் சுயநல எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிப்பதன் வழியாக, பேறுபெற்றவர்களாக, மகிழ்ச்சியுடையவர்களாக இறைவன் நம்மை மாற்றுகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசுவின் சீடர்களின் தனித்தன்மை, அவர்கள் அடையும் பலன்கள் என்ன என்பது குறித்து எடுத்துரைக்கும் லூக்கா நற்செய்தி 6ம் பிரிவின் 'பேறுகள்' என்ற பகுதி குறித்து ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 13, ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரைக்கென புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு அந்நாள் நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் பேறுபெற்றோர்(லூக் 6:20-23) என்ற பகுதி குறித்து சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் இயேசு தன் சீடரை நோக்கி, சீடர்களுக்குரிய பண்பு குறித்து எடுத்துரைத்தது அங்கிருந்தவரக்ளுக்கு வியப்பாக இருந்தது என எடுத்துரைத்தார்.

இயேசுவின் சீடர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதன் பதிலை, இயேசு எடுத்துரைத்த 'பேறுகள்' என்பவை தருகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்' என்று உரைப்பது, அவர்கள் ஏழைகளும் பெறுபெற்றோருமாக இருக்கின்றனர், மற்றும், அவர்கள் ஏழைகளாக இருப்பதாலேயே பேறுபெற்றோராய் இருக்கின்றனர் என்ற இரண்டு விடயங்களை அறிவிப்பதாக உள்ளது, என மேலும் கூறினார்.

இயேசுவின் சீடர்கள் என்பவர்கள் பணத்திலும், உலகாயுதப்பொருட்களிலும் தங்கள் மனமகிழ்வைக் காண்பதில்லை, மாறாக, இறைவன் வழங்கும் கொடைகளான வாழ்வு, இயற்கை, சகோதரர் சகோதரிகள் என அனைத்துக் கொடைகளிலும் மனமகிழ்வைக் கண்டுகொள்வதுடன், தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்வதிலும், எளிமையுடனும், முன்சார்பு எண்ணங்கள் இன்றி செயல்படுவதிலும் மகிழ்கின்றனர் என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதுமையான முறையில் பெருமளவு மீன்கள் கிடைத்ததைக் கண்ட புனித பேதுரு, அனைத்தையும் துறந்துவிட்டு இயேசுவை பின்தொடர்ந்ததைப் பற்றி எடுத்துரைத்த கடந்த ஞாயிறின் நற்செய்தியையும் மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் குரலுக்கு செவிமடுப்பதற்கும், அவரை பின்பற்றுவதற்கும் உள்ள வேறுபாட்டையும் எடுத்துரைத்தார்.

பணம், பொருள் என தேடி ஓடி சேர்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற உலகின் எண்ணத்திற்கு எதிராக, ஏழைகளே பெறுபெற்றோர், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என கூறும் இயேசு, சுயநல எண்ணங்களால் தேடிக்குவிக்கும் அனைத்தும்  இதயங்களை காலியாக வைத்திருக்கவே உதவுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார் என உரைத்த திருத்தந்தை, நம்மையே மையப்படுத்தி நாம் ஆற்றும் சுயநல எண்ணங்களிலிருந்து நம்மை விடுவிப்பதன் வழியாக, பேறுபெற்றவர்களாக, மகிழ்ச்சியுடையவர்களாக இறைவன் நம்மை மாற்றுகிறார் என எடுத்துரைத்தார்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு சீடருக்குரிய தயார் நிலையில் இருக்கின்றோமா?, நம் கடின மனநிலைகளை கைவிட்டு இயேசுவின் பாதையை தெரிந்துகொண்டு, மனதில் மகிழ்வைக் காண்கிறோமா என்ற கேள்விகளை முன்வைத்து தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுச்செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2022, 12:30

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >