வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க உதவுவது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
நற்செய்தியை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு, உடன் பிறந்த உணர்வுடன் கூடிய அன்பில் அதற்கு சான்றுபகரும்போது, வருங்காலத்தை நம்மால் நம்பிக்கையுடன் எதிர்நோக்கமுடியும் என, நவம்பர் 22ம் தேதி திங்கள்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'நாம் நம் வாழ்வின் மையமாக நற்செய்தியை வைத்து, உடன்பிறந்த உணர்வுடன் கூடிய அன்பில் அதற்கு சான்றுபகரும்போது, இன்று நாம் எதிர்நோக்கும் அனைத்துவிதமான, சிறிய மற்றும் பெரிய புயல்களையும் தாண்டி, வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க உதவும்' என்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
மேலும், இத்திங்கள் காலையில், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்துறைகளின் துணை இயக்குனர் அருள்பணி Paolo Nicolini, செக் குடியரசிற்கான திருப்பீடத் தூதர், பேராயர் Charles Daniel Balvo, இரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கான திருப்பீடத் தூதர், பேராயர் Giovanni d’Aniello, உலகில் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அமைப்பான La Francophonie அமைப்பின், பொதுச்செயலர் Louise Mushikiwabo அவர்களையும், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று காலையில், திருப்பீடத்திற்கான புதிய தூதராக பெரு நாட்டால் நியமிக்கப்பட்டுள்ள Jorge Eduardo Román Morey, அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, அவரை, வத்திக்கான் நாட்டிற்கான பெரு நாட்டுத் தூதராக வரவேற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்