நவம்பர் 1 - புனிதர் அனைவரின் திருநாள் நவம்பர் 1 - புனிதர் அனைவரின் திருநாள்  

புனிதத்துவத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்

பணம், மற்றும் அதிகாரம் எனும் ஆயுதங்களால் அல்ல, மாறாக, செபம் எனும் ஆயுதத்தின் துணைகொண்டு இவ்வுலகைப் பேணிக்காக்கின்றனர் புனிதர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் முதல் தேதி கொண்டாடப்படும் புனிதர் அனைவரின் திருநாள், அகில உலகை புனிதப்படுத்தும் நாளாகவும் சிறப்பிக்கப்படுவதையொட்டி, புனிதத்துவம் குறித்த கருத்துக்களை முன்வைத்து, இத்திங்கள்கிழமை, நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'உலகின் கண்களுக்கு மிகச்சிறியவர்களாகத் தெரியும் புனிதர்களே, பணம், மற்றும் அதிகாரம் எனும் ஆயுதங்களால் அல்ல, மாறாக, இறைவேண்டல் எனும் ஆயுதத்தின் துணைகொண்டு, இவ்வுலகைப் பேணிக்காக்கின்றனர்,' என்கிறது, திருத்தந்தையின், நவம்பர் முதல் தேதியின் முதல் டுவிட்டர் செய்தி.

'இவ்வுலகை நிறைத்து, பூத்துக்குலுங்கி, தங்கள் வாழ்வையே இறைவனுக்குரிய பண்ணாக மாற்றிய புனித ஆண்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து, இவ்வுலகின் ஒரே மீட்பராம் இயேசு போற்றப்படுவாராக', என விண்ணப்பிக்கிறது, திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தி.

'புனிதத்துவத்தைக் கண்டு அச்சம் கொள்ளவேண்டாம், ஏனெனில், அது நம் சக்தியையோ, உயிர்துடிப்பையோ, மகிழ்வையோ நம்மிடமிருந்து பறிப்பதில்லை, மாறாக, இறைத்தந்தை நம்மைப் படைக்கும்போது, நமக்கென தன் மனதில் கொண்டிருந்ததற்கு இயைந்த வகையில் நாம் உருவாகவும், நம் உள்இயல்பிற்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கவும், அது உதவுகிறது', என தன் மூன்றாவது டுவிட்டரில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நான்காவது டுவிட்டரில்,  நம் பார்வையை மேல்நோக்கி வைக்கவும், அன்புகூரப்படவும், கடவுளால் விடுவிக்கப்படவும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படவும் அஞ்சவேண்டாம், புனிதத்துவம் என்பது உங்களை மனிதநிலைக்குத் தாழ்ந்தவராக மாற்றுவதில்லை, ஏனெனில், இது உங்கள் பலவீனங்களுக்கும் இறையருளின் வல்லமைக்கும் இடையே நிகழும் சந்திப்பு', என கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2021, 14:50