மறைசாட்சி தேவசகாயம் மறைசாட்சி தேவசகாயம் 

2022ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படும் அருளாளர் தேவசகாயம்

இந்தியாவில் அருளாளராக வணங்கப்பட்டுவரும் தேவசகாயம் அவர்களை, புனிதராக உயர்த்தும் விழா, 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி வத்திக்கானில் இடம்பெறும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் அருளாளராக வணங்கப்பட்டுவரும் தேவசகாயம் அவர்களை, புனிதராக உயர்த்தும் விழா, 2022ம் ஆண்டு, மே மாதம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் 3ம் தேதியே, ஏழு அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பதற்குரிய அனைத்து வழிமுறைகளும் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், கோவிட் பெருந்தொற்று உருவாக்கிய பிரச்சனைகளால், இவர்களை புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, தள்ளிப்போடப்பட்டு, தற்போது, அந்நிகழ்வு, 2022ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லப்பட்ட அருளாளர் தேவசகாயம் அவர்களோடு இணைந்து மேலும் 6 அருளாளர்களும் வரும் ஆண்டு, மே மாதம் 15ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்தும் திருப்பலியில் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

அருள்பணியாளர்களாக பணியாற்றி உயிர் துறந்த அருளாளர்கள், César de Bus, Luigi Maria Palazzolo, Giustino Maria Russolillo, Charles de Foucauld, மற்றும், அருள் சகோதரிகள் Maria Francesca di Gesù, Maria Domenica Mantovani, ஆகிய ஆறு பேர், மற்றும், இலாசர் என்ற பெயரைத் தாங்கிய பொதுநிலையினரான அருளாளர் தேவசகாயம் ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்படுவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2021, 15:01