மறைக்கல்வியுரை: அன்பு மட்டுமே, மனித இதயத்தை ஈர்க்கும், மாற்றும்

நம் மீட்பு மற்றும், நம்பிக்கையின் மையம், ஆண்டவரின் மரணம், மற்றும் உயிர்ப்பே என்று, புனித பவுல் கலாத்தியருக்கு நினைவுபடுத்துகிறார் – புதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

“சகோதரர்களே, தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்” (கலா.5,22-24)

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் பிரிவு 5, இறைவசனங்கள் 22 முதல் 24 வரையுள்ள இப்பகுதியை மையமாகவைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 27, இப்புதன் காலையில் தன் மறைக்கல்வியுரையை வழங்கினார். கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டிருக்க, காலநிலையும் இதமாக இருக்க, உரோம் மாநகருக்கு வருகின்ற பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இப்புதன் காலையில் வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசீர்பெறுவதற்கும், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் வாழ்கின்ற இலங்கை மக்கள் உட்பட, பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் வந்திருந்தனர். கடந்த 12 வாரங்களாக புதன் மறைக்கல்வியுரைகளில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், அவர் கூறியுள்ள முக்கிய கருத்துக்களை விளக்கிவந்த திருத்தந்தை, இப்புதனன்று அதன் 13வது பகுதியாக, தூய ஆவியாரின் கனிகள் பற்றி எடுத்துரைத்தார்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். திருத்தூதர் பவுலுக்கு, நற்செய்தியின் மையமாக இருப்பது, கிறிஸ்துவின் சிலுவையின் பேருண்மை, மற்றும், அது வெளிப்படுத்தியுள்ள கடவுளின் ஒப்புரவாக்கும் அன்பை அறிவிப்பதுமேயாகும். இவ்வாறு புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலை மையப்படுத்தி நம் மறைக்கல்வியுரைகளில் சிந்தித்து வருகிறோம். இக்காலத்தில் பலர், தங்களின் வாழ்வு முழுவதிலும் கடவுளின் அன்பை ஏற்றுக்கொள்வதைவிட்டு, சடங்குகள் மற்றும், கட்டளைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உண்மையான, மற்றும், உயிருள்ள கடவுளில் தங்களின் பாதுகாப்பைத் தேடாமல், மதத்தில் தேடுகின்றனர். எனவே, முக்கியமானதற்கு, அதாவது, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவில் நமக்கு வாழ்வு தருகின்ற கடவுளிடம் திரும்பிவரவேண்டியது முக்கியம் என்று, புனித பவுல் கலாத்தியர்களிடம் கூறுகிறார்.  இயேசு, தம் பாடுகள், மரணம், மற்றும், உயிர்ப்பால், தூய ஆவியாரை நம்மீது பொழிந்துள்ளதன் வழியாக, நமக்கு மீட்பையும், புதிய வாழ்வையும் கொணர்ந்துள்ளார். எனவேதான், “இனி வாழ்பவன் நான் அல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலா.2,20) என்று, புனித பவுல் அவர்களால்  கலாத்தியர்களிடம் கூறமுடிந்தது. சிலுவையில் அறையுண்ட ஆண்டவரை செபச்சூழலில் நாம் செய்யும் தியானம், அல்லது, திருநற்கருணையின் முன்பாக மௌனமாக நாம் மேற்கொள்ளும் ஆராதனை ஆகியவை, கடவுளின் வாழ்வு மற்றும், அவரது அன்பின் பேருண்மையில் பங்குபெறுவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளதன் மகத்துவத்தின் மதிப்பறிந்து போற்றுவதற்கு நமக்கு உதவுகின்றன. கிறிஸ்தவ வாழ்வு என்பது, பாரம்பரியமாக அழைக்கப்பட்டுவரும், தீய சக்திகளுக்கு எதிராக இடம்பெறும் “ஆன்மீகப் போராட்டம்” உட்பட, தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குப் பணிந்து வாழ்வதாகும். அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் (கலா. 5:22) ஆகியவை தூய ஆவியாரின் கனிகளாகும். இவற்றுக்கு இயைந்தவண்ணம் வாழ்வதற்கு, புனித பவுலடிகளார் குறிப்பிடும், ‘ஊனியல்பின் செயல்களுக்கு’ எதிராக நாம் போராடவேண்டும். நம் ஆன்மீக, மற்றும், நம் குழுமங்களின் வாழ்வில், தூய ஆவியாரின் இந்தக் கனிகளை நாம் பேணி வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்ப்பதால், கிறிஸ்துவின் தூய ஆவியாரின் கொடையாக அவரில் நாம் பெற்றுள்ள புதிய வாழ்வு மற்றும், விடுதலைக்குச் சான்றுகளாகத் திகழ்வோம்.

புதன் மறைக்கல்வியுரை 271021
புதன் மறைக்கல்வியுரை 271021

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று இத்தாலியத்தில் வழங்கிய மறைக்கல்வியுரையின் சுருக்கம் அமைந்திருந்தது. மேலும், இவ்வுரையின் இறுதியில், உங்களனைவரையும், குறிப்பாக, கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் COP26 உலக உச்சி மாநாட்டிற்காகத் தயாரித்துவரும் பல்வேறு நாடுகளின் இளையோரை வாழ்த்துகிறேன் எனவும், அக்டோபர் 28, இவ்வியாழனன்று திருநாளைச் சிறப்பிக்கும் திருத்தூதர்கள் சீமோன், யூதா ஆகிய இருவரும் தங்கள் வாழ்வால் மீட்பளிக்கும் நற்செய்திக்குச் சான்றுபகர்ந்ததைப்போல, நீங்களும் வாழுமாறு ஊக்கப்படுத்தி வாழ்த்துகிறேன் எனவும் திருத்தந்தை கூறினார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:18