திருத்தந்தை பிரான்சிஸ் (புதன் மறைக்கல்வியுரை 2021.08.25) திருத்தந்தை பிரான்சிஸ் (புதன் மறைக்கல்வியுரை 2021.08.25)  

திருத்தந்தை: பங்குத்தளங்களை பணியின் பள்ளிகளாக உருவாக்குங்கள்

ஆயர்களின் மேய்ப்புப்பணிகள், பிறரன்பு, மற்றும், நம்பிக்கை ஆகியவற்றால் நிறைந்திருக்குமாறு, இத்தாலிய ஆயர்கள் குழு ஒன்றிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“இன்றையக் காலக்கட்டத்தில் நமக்கு இறைவாக்குத் தேவைப்படுகின்றது, ஆனால் அது உண்மையானதாக இருக்கவேண்டும் என்றும், அற்புதங்கள் பற்றிய ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை, மாறாக, கடவுளன்பு நிகழ்த்தும் அற்புதத்தை வெளிப்படுத்தும் வாழ்வே தேவைப்படுகிறது” என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 31, இச்செவ்வாயன்று வெளியிட்ட, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

இத்தாலிய ஆயர்களுக்கு செய்தி

மேலும், இத்தாலியின் கிராமப் பகுதிகள் பற்றி ஆயர்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள், தங்கள் மேய்ப்புப்பணிகளை, பிறரன்பு, மற்றும், நம்பிக்கை ஆகியவற்றால் நிறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்காலத்தில் மேலோங்கி நிற்கும், இன்னல்கள், தன்னலவாதம், மற்றும், புறக்கணிப்பு ஆகியவற்றைக் கண்டு சோர்வுறாமல், கூட்டுப்பண்பு, மற்றும், உடன்பிறப்பு உணர்வைக் கண்டுணர்ந்து, ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ளுமாறு, ஆயர்களை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்தகால நிலைகளுக்காக ஏக்கம்கொள்ளாமல், கடினவாழ்வு நிலவும் இடங்களில் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளைத் துணிவுடன் மேற்கொள்ளுமாறு கூறியத் திருத்தந்தை, பங்குத்தளங்களில் தாழ்ச்சியும், கனிவும் சுடர்விடும் வகையில், அவற்றை, கிறிஸ்தவ வாழ்வின் பயிற்சி மையங்களாகவும், மற்றவருக்குப் பணியாற்றும் பள்ளிகளாகவும் மாற்றுமாறும், இத்தாலிய ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

இச்செய்தியின் இறுதியில், ஆயர்கள் மேற்கொண்ட இம்முயற்சிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் ஆயர்கள் உருவாக்கும் திட்டங்கள், மக்கள், இயேசுவை அன்போடு சந்திப்பதை ஊக்கப்படுத்தும் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தாலியின் Benevento நகரில், ஏறத்தாழ இருபது ஆயர்கள், ஆகஸ்ட் 30, இத்திங்கள், 31 இச்செவ்வாய் ஆகிய இரு நாள்களில்  நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில், மக்கள்தொகை குறைவு, புறக்கணிப்பு, மற்றும், பொருளாதாரப் பிரச்சனை ஆகியவை நிலவும் பகுதிகளில், தங்களின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிகள் பற்றி கலந்தாய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2021, 14:39