திருத்தந்தை சிகிச்சை பெற்றுவரும் உரோம் ஜெமெல்லி மருத்துவமனை திருத்தந்தை சிகிச்சை பெற்றுவரும் உரோம் ஜெமெல்லி மருத்துவமனை  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நலமடைந்து வருகிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பெருங்குடல் நாளச்சுவரில் உருவான நலப்பிரச்சனையைத் தீர்க்க, வயிற்றின் இடது பக்கம், ஜூலை 4, ஞாயிறு மாலையில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் அறுவைச் சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 04, இஞ்ஞாயிறு மாலையில், உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட, பெருங்குடல் தொடர்பான அறுவைச் சிகிச்சைக்குப்பின், அவர் நலமடைந்துவருகிறார் என்று, ஜூலை 06. இச்செவ்வாயன்று, திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

இச்செவ்வாய் காலையில், திருத்தந்தை காலை உணவை உட்கொண்டார், நாளிதழ்களை வாசித்தார், நன்றாக சுவாசிக்கிறார், நடக்கத் துவங்கியுள்ளார் என்றுரைத்த, புரூனி அவர்கள், மற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதைக் கண்காணிக்கும் நோக்கத்தில், திருத்தந்தை, ஏழு நாள்களுக்கு, மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்றும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பெருங்குடல் நாளச்சுவரில் உருவான நலப்பிரச்சனையைத் தீர்க்க, வயிற்றின் இடது பக்கம், ஜூலை 4, ஞாயிறு மாலையில் ஏறத்தாழ மூன்று மணிநேரம்  அறுவைச் சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதையும், புதன் மறைக்கல்வி உரைகளையும் ஒதுக்கிவைத்து கோடைக்கால ஓய்வை சாந்தா மார்த்தா இல்லத்திலேயே மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கியைந்த வகையில், இம்மாதத்தில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிட்டிருந்தார்.

ஜூலை 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில், மயக்க மருந்து வல்லுநர்கள் உட்பட, 10 மருத்துவர்கள் அடங்கிய குழு ஈடுபட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2021, 15:19