தேடுதல்

இறைவனைத் தேடுவதில் சோர்வடையா விசுவாசத்தின் அருள்

திருத்தந்தை : நம் வாழ்வுப்பயணத்தைக் குறித்தும், அதில் சந்திக்கும் புயல், மற்றும் அலைக்கழிக்கும் பேரலைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திப்பது பயன்தரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இறைவனைத் தேடுவதில் எப்போதும் சோர்வடையாத விசுவாசத்தின் அருளை நாடுவோம், ஏனெனில், இறைவன் எப்போதும் நம் அருகே காத்திருக்கிறார் என, ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கிய நண்பகல் மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, புயலை அடக்கிய புதுமை குறித்துப் பேசும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும், பலவேளைகளில், நம் துன்ப துயர்களால் கலக்கமடைந்து, இறைவனை நோக்கி குரலெழுப்புவதோடு, அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம் எனக் கூறினார்.

நம் துன்பவேளைகளில் இறைவன் நம் அருகே இல்லை என்பது போன்று நமக்குத் தோன்றினாலும், நடப்பவை அனைத்திலும் அவரும் உடனிருக்கிறார், அதில் அவரும் பங்குபெறுகிறார் என்ற உண்மையை மறந்துவிடும் ஆபத்து குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் துன்பம் அடையும்போது, இறைவனை நோக்கி குரலெழுப்பி, அவரை மையமாக வைத்து, அவருடன் நம் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடுக்கடலில் அபயக்குரல் எழுப்பும் புலம்பெயர்ந்தோரின் விண்ணப்பத்தை, இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார்.

நம் வாழ்வுப்பயணத்தைக் குறித்தும், அதில் சந்திக்கும் புயல், மற்றும் அலைக்கழிக்கும் பேரலைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திப்பது பயன்தரும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை குறித்து நாம் இறைவனோடு விவாதிப்பதோடு, அவரில் ஆறுதலையும் அடைக்கலத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும்,  அதற்காகவே இறைவன் நம்மருகில் காத்திருக்கிறார் என எடுத்துரைத்தார்.

மாலுமிகள், தங்கள் திசையைக் கண்டுகொள்ள, விண்மீன்களைப் பார்ப்பதுபோல், நாமும் நம் வாழ்வில் இறைவனை நோக்கி நம் வாழ்வைத் திருப்பவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, புயலால் அச்சமுற்ற சீடர்கள், எவ்வாறு இயேசுவை நோக்கித் திரும்பினார்களோ, அவ்வாறே, நாமும், கடவுளை நோக்கித் திரும்புகையில், அவர் நமக்கு புதுமைகளை ஆற்றுவார் என உறுதி வழங்கினார்.

இறைவனை தொந்தரவுச் செய்யாமல் நம்மால் தனியாக அனைத்தையும் சமாளிக்கமுடியும் என எண்ணுவது தவறு, ஏனெனில், இறைவேண்டல், எப்போதும், பேராற்றலை, தன்னுள்ளேக் கொண்டுள்ளது என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஏன் அஞ்சுகிறீர்கள், உங்களுக்கு விசுவாசம் இல்லையா, என இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இன்று நம்மைப் பார்த்தும் கேட்கிறார் என எடுத்துரைத்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2021, 14:36

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >