தேடுதல்

திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 130621 திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 130621 

ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மறைவான இருப்பு உள்ளது

வாழ்விலும், வரலாற்றிலும் எப்போதும் செயலாற்றும் இறைவனைக் கண்டுகொள்வதன் வழியாக, நமக்கு, முன்னோக்கிச் செல்லும் சக்தி கிட்டுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மறைவான இருப்பு உள்ளது, அதனை கண்டுகொண்டு கவனமுடன் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகச் சிறியதாக இருக்கும் கடுகு விதை பெரிய மரமாகி, பறவைகளுக்கும் தங்குமிடமாவது பற்றி இயேசு கூறிய உவமையைச் சுட்டிக்காட்டி, இவ்வாறே கடவுளும் நம் வாழ்வில் செயலாற்றுகிறார் எனக் கூறினார்.

நாம் வாழும் இந்த அவசர உலகில், இறைவனின் செயல்பாடுகளை நாம் கண்டுகொள்ளாமல் போகும் ஆபத்து ஏற்படலாம், ஆனால், நம் நற்செயல்கள் ஒப்பீட்டு அளவில் சிறியதாக இருப்பினும், தாழ்ச்சியிலும், மறைவான நிலையிலும், நமக்கு புலப்படாத வகையில் வளர்ந்து பெரிதாகின்றன என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்மை சக்தியற்றது, தீமையே எப்போதும் வெல்லும் என்ற சோதனைகள் நம் வாழ்வில் ஏற்படும்போது, விதைகள் முளைத்தல் குறித்து இயேசு கூறும் உவமைகள், நமக்கு உறுதியான நம்பிக்கையை வழங்குபவைகளாக, இருக்கவேண்டும் என, விசுவாசிகளை நோக்கி அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் வாழ்வில் மறைந்திருக்கும் உண்மை நிலைகளைக் குறித்து கண்களைத் திறந்தவர்களாக, நம் வாழ்விலும், வரலாற்றிலும் எப்போதும் செயலாற்றும் இறைவனைக் கண்டுகொள்வதன் வழியாக நமக்கு முன்னோக்கிச் செல்லும் பலம் கிட்டுகிறது என்றுரைத்த திருத்தந்தை, நாம் கடவுளின் அரவணைப்பில் இருக்கிறோம் என்பதில் முழுநம்பிக்கைக் கொள்வது, நாம் இந்த பெருந்தொற்றிலிருந்து வெற்றியுடன் வெளியே வருவதற்கு உதவும் என மேலும் எடுத்துரைத்தார்.

நம்முடைய திட்டங்களையும், முயற்சிகளையும், செயல்படுத்த முனைகையில், இடையே வளரும் சந்தேகக் களைகளையும், விசுவாச நெருக்கடிகளையும் கண்டு சோர்வடையாமல் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும், என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புடனும், அர்ப்பணத்துடனும், பொறுமையுடனும், விதைகளை விதைப்பதே நம் கடமை, அவைகளை வளர வைப்பதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நமபிக்கையுடன் செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2021, 13:11

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >