திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை - 020521 திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை - 020521 

இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும்

திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நாம் இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே பயன் தரமுடியுமென்பது குறித்து விளக்கும் 'இயேசுவே உண்மையான திராட்சைக் கொடி', என்ற நற்செய்தி பகுதியை (யோவா 15:1-8) மையப்படுத்தி, இஞ்ஞாயிறு நண்பகலில், 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 2ம் தேதி, உயிர்ப்பு காலத்தின் 5ம் ஞாயிறின், திருப்பலி நற்செய்தி வாசகம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைக் கொடிகள் தனியாக தங்களால் வாழமுடியாது, தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக, அவை, செடியைச் சார்ந்திருப்பதுபோல், ஒவ்வொருவரும் இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும், என எடுத்துரைத்தார்.

இணைந்திருத்தல் என்ற வார்த்தையை இந்நாள் நற்செய்தியில் அதிகம் அதிகமாக பயன்படுத்தும் இயேசு, இணைந்திருத்தல் என்பதன் வழியாக, இயேசுவுடன் இணைந்து சோம்பியிருப்பதை குறிக்கவில்லை, மாறாக, உயிரோட்டமாக இருக்க வேண்டியதைக் கேட்கின்றார், எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிளைகள் கனிகளை வழங்க, திராட்சைச் செடியினைச் சார்ந்திருக்கும் நிலை தேவை என்பதுபோல், திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செடியும் கிளைகளும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோல், நாமும் இயேசுவும் இணைந்திருக்கிறோம் என்று கூறினார்.

அனைத்திற்கும் மேலாக நமக்கு முதலில் இறைவன் தேவை, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும், அவரின் கட்டளைகளையும், பெரும்பேறுகளையும், இரக்கச் செயல்பாடுகளையும், கடைப்பிடிப்பதற்கு முன்னால், அவரோடு இணைந்திருத்தல் அவசியம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்ற புனித பவுலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

கனிகளைத் தரும் கிளைகளைப்போல், நம் தேவை, அதாவது, நம் சான்று இயேசுவுக்கு தேவைப்படுகின்றது. ஏனெனில் இயேசு, தந்தையிடம் மேலெழும்பி சென்றபின், நற்செய்திப் பணியை தங்கள் வார்த்தை, மற்றும் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக தன் சீடர்கள் சான்று பகரவேண்டுமென இயேசு எதிர்பார்த்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்று, நமக்கு அடுத்திருப்பவருக்கும், சமுதாயத்திற்கும், திருஅவைக்கும் நன்மைகளை ஆற்றுவது, இயேசுவின் அன்புக்கு, நம் வாழ்வு வழியாக வழங்கப்படும் சான்று என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுவதுபோல், ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசுவுக்குச் சான்று பகிர்வதில் அடங்கியுள்ளது என மேலும் கூறினார்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (v.7), என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி,  நம் வாழ்வு நம் இறைவேண்டலைச் சார்ந்து உள்ளது என கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப்போல் நாமும் சிந்தித்து, நடந்து, அவர் கண்கள் வழியாக  உலகைப் பார்ப்பதன் வழியாக, ஏழைகளையும் துயருறுவோரையும் அன்புகூர்ந்து, பிறரன்பு மற்றும் அமைதியின் கனிகளைக் கொணரமுடியும் என எடுத்துரைத்து, அன்னைமரியின் பரிந்துரையில் அனைவரையும்  ஒப்படைத்து, தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2021, 19:43

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >