திருத்தந்தை பிரான்சிஸ்  U.N பிலிப்போ கிராந்தி  திருத்தந்தை பிரான்சிஸ் U.N பிலிப்போ கிராந்தி  

திருத்தந்தை பிரான்சிஸ் புறக்கணிக்கப்பட்டோரின் குரல்- ஐ.நா.

பெருமளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான இடம், மற்றும், ஏனைய உதவிகள் வழங்கப்படவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துன்ப, துயர நேரங்களில், கடவுள் நம் மீது வைத்துள்ள அன்பில், ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 17, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“கடவுளின் அன்பு ஒன்றே, நம் வாழ்வை மாற்றவல்லது, ஆழமான காயங்களைக் குணமாக்கவல்லது, மற்றும், ஏமாற்றம், கோபம், தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் புகார் ஆகியவற்றினின்று நமக்கு விடுதலையளிக்கவல்லது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பிலிப்போ கிராந்தி (UNHCR)

மேலும், சமுதாயத்தின் விளிம்புநிலைக்கு அதிகம் தள்ளப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், தங்கள் சொந்த இடங்களைவிட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்வோர், குடிபெயர்ந்தோர் போன்ற மக்களின் குரலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருக்கிறார் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

UNHCR எனப்படும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி (Filippo Grandi) அவர்கள், ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசியபின், உலகஅளவில் இடம்பெறும் புலம்பெயர்வு விவகாரம் குறித்து, திருத்தந்தை, ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலக அளவில் காட்டப்படும் தோழமை, மற்றும், பராமரிப்பு பற்றி, திருத்தந்தையும், தானும் கலந்துரையாடியதாக, செய்தியாளர்களிடம்  தெரிவித்த கிராந்தி அவர்கள், UNHCR அமைப்பு, புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோருக்கு உதவுவதில், திருப்பீடத்தோடு கொண்டுள்ள ஒத்துழைப்பை ஊக்குவிக்க விரும்புவதாகக் கூறினார்.

பெருமளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடுகள், அவர்களை சமுதாயத்தோடு ஒருங்கிணைத்து, அவர்களுக்கு பாதுகாப்பான இடம், மற்றும், ஏனைய உதவிகளை வழங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்கு, நல்ல பதில்கள் கிடைத்து வருகின்றன என்றும், கிராந்தி அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2021, 15:18