திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை - 250421 திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை - 250421 

ஒவ்வொருவரையும் இயேசு தெரிந்து வைத்திருக்கிறார்

மக்களனைவர் மீதும் கொண்ட அன்பால் தன் உயிரையே தியாகம் செய்த இயேசுவின் அன்புக்குச் சான்றுகளாக, தாழ்ச்சி, மற்றும் உடன்பிறந்த அன்போடு செயல்பட…

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நல்லாயனாம் இயேசு தன் வார்த்தையின் ஒளி வழியாக நம்மை காப்பதோடு, தன் இருப்பு, மற்றும் அருளடையாளங்கள் வழியாக நம்மை பலப்படுத்துகிறார், என நல்லாயன் ஞாயிறு நண்பகலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய வானக அரசி வாழ்த்தொலி உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பேராலாய வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு, ஏப்ரல் 25, ஞாயிறன்று, வானக அரசி வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு நான் வந்துள்ளேன், என இயேசு கூறும் வார்த்தைகளைக் கொண்ட நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கூலிக்கு வேலைசெய்வோர், ஓநாய்களைக் கண்டால், தப்பி ஓடிவிடுவர், ஆனால், நல்லாயனாம் இயேசுவோ, தன் உயிரையும் கொடுத்து, தன் ஆடுகளை காப்பவர் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன' என் இயேசு கூறுவதைக் கேட்கும்போது, நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் இயேசு தெரிந்து வைத்திருக்கிறார் என அறிவதே மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றார்.

மற்றெவரையும் விட நம் இதயங்களை அதிகம் அதிகமாக அறிந்திருக்கும் இயேசு, நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் பலம், குறைபாடுகள், என அனைத்தையும் அறிந்தவராக, நம்மீது அக்கறை கொண்டவராக, நம் காயங்களுக்கு மருந்திட்டு, நம்மைக் குணப்படுத்துகிறார் (எசே 34:11-16), என்றார் திருத்தந்தை.

நல்லாயனாம் இயேசு, தன் ஆடுகளை பாதுகாக்கிறார், அவைகளை அறிந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, தன் ஆடுகளை அன்புகூர்கிறார் என்பதாலேயே தன் ஆடுகளுக்காக தன் உயிரைத் தரவும் தயாராக இருக்கிறார் (யோவா 10:15) என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  'இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும், அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்' (யோவா 10:16), என இயேசு கூறுவது, அனைத்து மக்களும் இறைத்தந்தையின் அன்பைப் பெற்று, அதன் வழியாக வாழ்வைப் பெற வேண்டுமென்ற இயேசுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என கூறினார்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டுவர விரும்பும் இயேசுவின் பணியை ஏற்று நடத்தவேண்டியது திருஅவையின் கடமை என்றுரைத்த திருத்தந்தை, இவ்வுலக மக்களனைவர் மீதும் கொண்ட அன்பால் தன் உயிரையே தியாகம் செய்த இயேசுவின்  அன்புக்குச்  சான்றுகளாக, தாழ்ச்சி, மற்றும் உடன்பிறந்த அன்போடு நாம் செயல்பட, அன்னை மரியா நமக்கு உதவுவாராக, என தன் வானக அரசி வாழ்த்தொலி உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2021, 12:53

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >