தேடுதல்

அல்லேலூயா வாழ்த்தொலி  உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 

மருத்துவப் பணியாளர்கள், சமுகப் பணியாளர்களுக்கு சிறப்பு நன்றி

மக்களுக்குத் தொண்டாற்றுவோர் அனைவரும், இறைஇரக்க நடவடிக்கைகளின் உறுதியான சான்றுகளாக உள்ளார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இறைஇரக்கத்தின் ஞாயிறை முன்னிட்டு, உரோம் நகரின் Santo Spirito in Sassia எனும் கோவிலில் காலை திருப்பலி நிறைவேற்றி, அதன் இறுதியில் அல்லேலூயா வாழ்த்தொலி  உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகளிடையே பணியாற்றுவோர், நோயுற்றோர், புலம்பெயர்ந்தோர், சமூகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் ஆகிய அனைவருக்கும் தன் சிறப்பு வாழ்த்துக்களை வெளியிட்டார்.

உரோம் நகரில், இறைஇரக்கத்தின் திருத்தலமாக விளங்கும், இக்கோவிலில் ஞாயிறு திருப்பலியில் கலந்துகொண்ட பங்குமக்கள், நோயுற்றோர், தாதியர், மாற்றுத்திறனாளிகள், புலம்பெயர்ந்தோர், மருத்துவமனை அருள்சகோதரிகள், மக்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வப் பணியாளர்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்வதாக தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் அனைவரும் இரக்க நடவடிக்கைகளின் உறுதியான சான்றுகளாக உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மக்களுக்காக உழைக்கும் மருத்துவப் பணியாளர்களும், சமூகப் பாதுகாப்புத் தொண்டர்களும், துன்பத்தில் இருப்போருக்கு அருகாமை, சேவை, மற்றும் அக்கறையின் சான்றுகளாக உள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவர்கள் இறைஇரக்கத்தைப் பெற்று, அதன் வழியாக, மற்றவர்களை இரக்கமுடன் நடத்துவார்களாக, என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இத்திருப்பலிக்கு ஏற்பாடு செய்து, சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி மக்களைச் சென்றடைய உதவிய அனைவருக்கும் தன் தனிப்பட்ட நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அன்னையும், இரக்கத்தின் தாயுமாகிய கன்னிமரியா, இறைஇரகக்கத்தைப் பெற்றுத்தருவாராக என வேண்டுதல் செய்து தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார்.

இறைஇரக்க ஞாயிறு திருப்பலிக்குப்பின் வழங்கப்பட்ட அல்லேலூயா வாழ்த்தொலி  உரையின் இறுதியில், அன்றைய திருப்பலியில் கலந்து கொண்ட நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், சமூகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர், அகதிகள், புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவரையும், திருப்பலிப் பீடத்தின் முன் ஒவ்வொருவராக சந்தித்து, தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை.

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விசுவாசிகள் திருப்பலியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 April 2021, 12:54

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >