‘வானக அரசியே’ வாழ்த்தொலி உரை-180421 ‘வானக அரசியே’ வாழ்த்தொலி உரை-180421 

பாராமுகம் என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்குதல்

திருத்தந்தை : உற்றுநோக்குதல், தொட்டுப் பார்த்தல், உண்ணுதல் என்ற இம்மூன்றும், வாழும் கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் சந்திப்பில் மகிழ்ச்சியைக் கொணர்பவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

உயிர்ப்பின் மூன்றாவது ஞாயிறன்று நம்மை எருசலேமுக்குத் திரும்பிச்செல்ல அழைக்கும் இன்றைய நற்செய்தி வாசகம், எம்மாவு செல்லும் வழியில் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டதை, இரு சீடர்களும் ஏனைய சீடர்கள் குடியிருந்த மாடத்திற்கு வந்து தாங்கள் இயேசுவைக் கண்ட விவரத்தையும், இயேசு அவர்களுக்குத் தோன்றியதையும் காட்டுகிறது, என, தன் ‘வானக அரசியே’ வாழ்த்தொலி உரையை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுயிருந்த விசுவாசிகளை நோக்கித் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்களுக்கு அமைதி உண்டாகுக என கூறியவண்ணம், சீடர்களுக்குத் தோன்றிய இயேசுவை, ஓர் ஆவியென சீடர்கள் சந்தேகப்பட்டதையும் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காயங்களை அவர்களுக்கு காட்டியபோது மகிழ்ச்சி மேலிட்டு நம்பமுடியாதவர்களாய் வியப்பிலிருந்த சீடர்களை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, இயேசு உணவைக் கேட்டு வாங்கி அவர்கள் முன் உண்டார் என்று கூறினார் .

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு மூன்றுவிதமான செயல்பாடுகளைக் காண்பிக்கிறது, என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உற்றுநோக்குதல், தொட்டுப் பார்த்தல், உணவை உண்ணுதல் என்ற இம்மூன்றும், வாழும் கிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் சந்திப்பில் மகிழ்ச்சியைக் கொணர்பவை என்று கூறினார்.

உற்றுநோக்குவது என்பது அன்பின் செயல்பாடு, ஏனெனில், பெற்றோர் தங்கள் குழந்தையை அன்புடன் உற்றுநோக்குகின்றனர், காதலர்கள் ஒருவரையொருவர் பாசமுடன் நோக்குகின்றனர், மருத்துவர், நோயாளியை அக்கறையுடன் நோக்குகிறார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராமுகம் என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்குதலேயாகும், துயர்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும்போது அதிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு விலகி ஓடும் சோதனைக்கு எதிரானது இந்த உற்று நோக்கல், என மேலும் எடுத்துரைத்தார். 

தன்னை முன்வந்து தொடும்படி தன் சீடர்களுக்கு, உயர்த்த இயேசு விடுத்த அழைப்பு, நாம் ஒவ்வொரும், நம் சகோதரர் சகோதரிகளை, தூரத்திலிருந்து பார்க்கும் நிலையில் மட்டும் தூர விலக்கி வைத்து வாழமுடியாது என்பதை காட்டுவதாக உள்ளது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாதையில் காயம்பட்டு கிடந்தவரைக் கண்டு அவரைத் தொட்டுத் தூக்கி உதவிய நல்ல சமாரியரைப் போன்று, இயேசுவுடன் ஆன ஒன்றிப்பு, நெருக்கமுடைய ஒன்றாக இருக்க வேண்டுமென்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இன்று காணும் மூன்றாவது செயல்பாடு, உண்ணுதல் என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்பது என்ற செயல், நம் உடலுக்கு சத்து தருவது என்றாலும், குடும்பத்தோடு ஒன்றிணைந்து உண்ணும்போது, அது அன்பின், ஒன்றிப்பின், மற்றும் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக மாறுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த இயேசு, தன் சீடர்களோடு அமர்ந்து உணவு உண்பதையும், திருநற்கருணை விருந்து என்பது கிறிஸ்தவ சமூகத்தின் உண்மையான அடையாளம் என்பதையும், எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வு என்பது, இறைவனோடு கூடிய உயிருள்ள உறவு, ஏனெனில், நாம் உயிர்த்த இயேசுவை உற்றுநோக்கி, அவரைத் தொட்டுணர்வதோடு அவர் வழி ஊட்டம் பெறுகிறோம் என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2021, 13:21

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >