தடுப்பூசி வழங்கப்பட்ட வறியோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தடுப்பூசி வழங்கப்பட்ட வறியோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

தடுப்பூசி வழங்கப்பட்ட வறியோரைச் சந்தித்த திருத்தந்தை

வத்திக்கானைச் சுற்றி இருக்கும் ஏறத்தாழ 1,200 வீடற்ற வறியோரில், இதுவரை 800க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திற்குச் சென்று, அங்கு, கோவிட் பெருந்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்ட வீடற்ற வறியோரைச் சந்தித்தார்.

புனித வெள்ளி காலை 10 மணியளவில், அரங்கத்திற்குச் சென்ற திருத்தந்தை, அங்கு வறியோருக்கு தடுப்பூசிகள் வழங்கிவந்த மருத்துவர்கள், தாதியர் மற்றும் தன்னார்வத் தொண்டர்களைச் சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறினார்.

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் கர்தினால் Konrad Krajewski அவர்களும், பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இத்தாலிய கழகங்களின் தொண்டர்களும், திருத்தந்தையுடன் அரங்கத்திற்குச் சென்றனர்.

அரங்கத்தில், தடுப்பூசி பெற்றவர்கள், மற்றும் தடுப்பூசி பெற காத்திருந்தவர்கள் அனைவரையும், திருத்தந்தையும், கர்தினால் Krajewski அவர்களும், சந்தித்துப் பேசினர்.

வத்திக்கானைச் சுற்றி இருக்கும் ஏறத்தாழ 1,200 வீடற்ற வறியோரில், இதுவரை 800க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2021, 18:08