விசுவாசப் பாதையில் நமக்கு முன்னே அன்னை மரியா

திருத்தந்தை : பெருந்தொற்றுச் சூழலை, அதாவது, உடல், மற்றும் மனத்தளவில் அனுபவிக்கும் தீமைகளை அகற்றிட, இயேசு சிலுவையை தன் தோள்களில் எடுத்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக, குறைந்த விசுவாசிகளின் பங்கேற்புடன் புனித பேதுரு பெருங்கோவிலினுள் குருத்தோலை பவனியை நடத்தி, திருப்பலியும் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில், அங்கு குழுமியிருந்தவர்களோடு இணைந்து ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்தையும் செபித்தார். அவ்வேளையில் அன்னைமரியாவின் எடுத்துக்காட்டு குறித்து அவர் வழங்கிய மூவேளை செப உரை இதோ:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

நாம் புனித வாரத்தைத் துவக்கியுள்ளோம். இரண்டாவது முறையாக நாம் பெருந்தொற்றுச் சூழலுக்குள் இந்த புனித நாட்களை வாழ்கிறோம். கடந்த ஆண்டு, இது, மிகுந்த துயரம் தருவதாக இருந்தது. இந்த ஆண்டு, மேலும் சோதனைகளையும், துயரத்தையும், தருவதாக உள்ளது. பொருளாதார நெருக்கடி பெரும் சுமையாக மாறியுள்ளது.

இந்த வரலாற்று, சமுதாயச் சூழலில் கடவுள் என்னச் செய்து கொண்டிருக்கிறார்? அவர் சிலுவையை எடுத்துள்ளார். இந்தச் சூழலை, அதாவது, உடல், மற்றும் மனத்தளவில் அனுபவிக்கும் தீமைகளை  அகற்றிட, அவர் சிலுவையை தன் தோள்களில் எடுத்துள்ளார். இன்றைய நெருக்கடியை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, தீமையானது மக்களிடையே நம்பிக்கியின்மையையும், விரக்தியையும், முரண்பாடுகளையும் விதைப்பதை தடுப்பதற்கென சிலுவையைச் சுமக்கிறார் இயேசு. அவர் சிலுவையை எடுத்துள்ளார். நாமென்னச் செய்கிறோம்? நாமென்னச் செய்யவேண்டும்? நாம் என்னச் செய்யவேண்டுமென்பதை நமக்குக் காண்பிக்க வருபவர், இயேசுவின் முதல் சீடரும், அவரின் தாயுமாகிய அன்னை மரியா. அவர் தன் மகனைப் பின் தொடர்ந்துச் சென்றார். அன்னை மரியா, தன் பங்காக, துயர்களையும், இருளான நேரங்களையும், குழப்பங்களையும் தாங்கிக்கொண்டு, பாடுகளின் பாதையில், விசுவாச விளக்கை ஏந்தியவராக நடந்துச்செல்கிறார். இறையருளுடன், நாமும், இப்பாதையில் தொடர முடியும். நாம் நம் தினசரி வாழ்வின் சிலுவைப் பாதையில், துன்ப துயர்களை அனுபவிக்கும் எண்ணற்ற நம் சகோதரர் சகோதரிகளைச் சந்திக்கிறோம். அவர்களை வெறுமனே தாண்டிச் செல்லாமல், நம் இதயங்கள் கருணையால் கசிந்திட அனுமதித்து, அவர்களுக்கு நெருக்கமாகச் செல்வோம். அப்போதுதான், சீரேன் ஊராராகிய சிமியோன் போல் நாம் நமக்குள் 'ஏன் நான்' என எண்ணும் நிலை உருவாகலாம். அப்போது நாம், தகுதியற்றவர்களாக இருந்தும், நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடை நம்மைத் தொடுவதை உணர்வோம். விசுவாசத்தின் பாதையில் எப்போதும் நமக்கு முன்னே நடந்துசெல்லும் அன்னை மரியா நமக்கு உதவுவாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2021, 13:05

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >