போர்த்துக்கல் அரசுத்தலைவர் மார்செலோ தெ சோசா போர்த்துக்கல் அரசுத்தலைவர் மார்செலோ தெ சோசா  

திருத்தந்தை, போர்த்துக்கல் அரசுத்தலைவர் தெ சோசா சந்திப்பு

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் போர்த்துக்கல் நாட்டு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்கு அந்நாட்டு அரசுத்தலைவர் பாராட்டு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

போர்த்துக்கல் நாட்டு அரசுத்தலைவர் மார்செலோ ரெபெலோ தெ சோசா (Marcelo Rebelo de Sousa) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 12, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

அரசுத்தலைவர் தெ சோசா அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும், போர்த்துக்கல் நாட்டிற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அந்நாட்டில் வாழ்வைப் பாதுகாத்தல், அமைதியான சமுதாய நல்லிணக்க வாழ்வை உருவாக்குதல், குறிப்பாக, தற்போதைய பெருந்தொற்று நெருக்கடியில், நலவாழ்வைப் பேணுதல் உட்பட, கத்தோலிக்கத் திருஅவை, பொதுநலனுக்கு ஆற்றிவரும் பணிகள் போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.

ஐரோப்பிய ஒன்றிய அவைக்கு, போர்த்துக்கல் நாடு தற்போது தலைமை வகிப்பதையொட்டி, உலகில் பெருந்தொற்றை ஒழிப்பது, அமைதிக்குப் பணியாற்றுவது உட்பட, பல்வேறு உள்நாட்டு, மற்றும், பன்னாட்டு விவகாரங்களும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

PalIanuoto நீச்சல் விளையாட்டுக் குழு

போர்த்துக்கல் நாட்டு அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, தெ சோசா அவர்களைச் சந்தித்தபின்னர், வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இத்தாலியின் ஜெனோவா நகரின் PalIanuoto நீச்சல் விளையாட்டுக் குழுவின் பொறுப்பாளர்கள், மற்றும், விளையாட்டு வீரர்கள் 32 பேரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

[ Photo Embed: PalIanuoto விளையாட்டுக் குழு]

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2021, 15:00