பிளாரன்ஸ் நகரில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் டான்டே உருவச்சிலை பிளாரன்ஸ் நகரில் நிறுவப்பட்டுள்ள கவிஞர் டான்டே உருவச்சிலை 

கவிஞர் Dante Alighieri 7ம் நூற்றாண்டு – திருத்தந்தையின் மடல்

மனிதமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் வெகுவாக சிதைந்துள்ள இக்காலத்தில், நம்பிக்கையின் இறைவாக்கினராக வாழ்ந்து, தன் உன்னத படைப்புக்களை உலகிற்கு வழங்கிய கவிஞர் Dante Alighieri – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு' என்ற திருநாள், உன்னதக் கவிஞர் Dante Alighieri அவர்கள் வாழ்விலும், அவரது படைப்புக்களிலும் தனியொரு இடத்தைப் பெற்றிருந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25ம் தேதி, சிறப்பிக்கப்பட்ட 'ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு' திருநாளன்று வெளியிட்ட ஒரு திருத்தூது மடலில் கூறியுள்ளார்.

இத்தாலியக் கவிஞர், Dante Alighieri

இத்தாலியக் கவிஞர், Dante Alighieri அவர்கள் மரணமடைந்ததன் 7ம் நூற்றாண்டு நிறைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நித்திய ஒளியின் உன்னதம்' என்று பொருள்படும், “Candor lucis aeternae” என்ற தலைப்பில் வெளியிட்ட இத்திருத்தூது மடலின் ஆரம்பத்தில், கவிஞர் டான்டே அவர்களை புகழும் பலரின் குரலோடு தன் குரலையும் இணைத்து, இம்மடலை வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.

1265ம் ஆண்டு, இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்து, 1321ம் ஆண்டு, செப்டம்பர் 14ம் தேதி, ரவென்னா நகரில் உயிர் துறந்த கவிஞர் டான்டே அவர்கள், 'Divine Comedy' உட்பட, பல காவியங்களை உருவாக்கியவர்.

திருத்தந்தையரால் புகழப்பட்ட கவிஞர் டான்டே

ஒன்பது பகுதிகளைக் கொண்ட இம்மடலின் முதல் பகுதியில், கடந்த நூற்றாண்டில் கவிஞர் டான்டே அவர்களைப் புகழ்ந்து பேசிய திருத்தந்தையரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.

1921ம் ஆண்டு, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இக்கவிஞர் மரணமடைந்ததன் 6ம் நூற்றாண்டை நினைவுகூர்ந்தார் என்றும், அத்திருத்தந்தை வெளியிட்ட மடலில், திருத்தந்தை 13ம் லியோ மற்றும் திருத்தந்தை புனித 10ம் பயஸ் ஆகியோர், கவிஞர் டான்டே அவர்களைக் குறித்து எழுதியுள்ள கருத்துக்கள் பதிவாகியுள்ளன என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1965ம் ஆண்டு, இக்கவிஞர் பிறந்ததன் 7ம் நூற்றாண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், டான்டே அவர்களின் கல்லறையில் வைப்பதற்கென ஒரு தங்கச் சிலுவையை அனுப்பினார் என்றும், கவிஞருக்கும், திருஅவைக்கும் இடையே இருந்த ஆழ்ந்த உறவை வெளிப்படுத்தும், Altissimi Cantus என்ற திருமடலை வெளியிட்டார் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கவிஞர் டான்டே அவர்களைப் பற்றி தன் உரைகளில் குறிப்பிட்டார் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்ட Deus Caritas Est என்ற திருமடலில், கவிஞர் டான்டே இறைவனைக் குறித்து கொண்டிருந்த கண்ணோட்டத்தை பதிவு செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

ஒன்பது பகுதிகளைக் கொண்ட திருத்தூது மடல்

இந்த அறிமுகப் பகுதியைத் தொடர்ந்து, டான்டே அவர்களின் வாழ்வு, கவிஞராகவும், நம்பிக்கையின் இறைவாக்கினராகவும் அவர் மேற்கொண்ட பணி, மனித ஆசைகளின் கவிஞராக டான்டே, இறைவனின் இரக்கத்தையும், மனித சுதந்திரத்தையும் பாடிய கவிஞர் என்ற பல்வேறு தலைப்புக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூது மடலை எழுதியுள்ளார்.

டான்டே காவியத்தில் அன்னை மரியா

வானதூதர் கபிரியேல் ஆண்டவரின் பிறப்பை அறிவித்த வேளையில் அதற்கு 'ஆம்' என்று பதிலிறுத்த அன்னை மரியாவைக் குறித்து, கவிஞர் டான்டே அவர்கள் எழுதிய புகழ்பெற்ற Divine Comedy என்ற காவியத்தில் கூறியுள்ள எண்ணங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூது மடலின் 7ம் பகுதியில் விளக்கிக் கூறியுள்ளார்.

ஏழ்மை என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களும், கவிஞர் டான்டே அவர்கள் உருவாக்கிய Divine Comedy காவியத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருத்தூது மடலின் 8ம் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையின் இறைவாக்கினர்

தன் படைப்புக்கள் மற்றும் வாழ்வினால் ஒரு சாட்சியாக வாழ்ந்த கவிஞர் டான்டே அவர்கள், தன் படைப்புக்களை வாசித்து, அவற்றைப்பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதோடு நாம் நின்றுவிடாமல், அவரது வாழ்வுப் பயணத்தில் நாமும் இணைந்து நடக்க அழைக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்ற தன் திருத்தூது மடலின் இறுதிப் பகுதியில் கூறியுள்ளார்.

மனிதமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் வெகுவாக சிதைந்துள்ள இக்காலத்தில், நம்பிக்கையின் இறைவாக்கினராக வாழ்ந்து, தன் உன்னத படைப்புக்களை உலகிற்கு வழங்கிய கவிஞர் Dante Alighieri அவர்கள், நம் வாழ்வின் திருப்பயணத்தை அமைதியோடும், நம்பிக்கையோடும் மேற்கொள்ள உதவி செய்வார் என்ற எண்ணத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “Candor lucis aeternae” என்ற தன் திருத்தூது மடலை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2021, 15:10