தேடுதல்

மூவேளை செபவுரை - 210321 மூவேளை செபவுரை - 210321 

துன்ப துயர்களில் மடியும்போது, அங்கு வாழ்வு மலர்கின்றது

திருத்தந்தை : இயேசுவை சந்திக்க விரும்பும் பலர், எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் வெளியிட்டுவரும் ஆவலுக்கு, நம் வாழ்வுச் சான்று வழியாக பதிலுரைப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 21, இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில், இயேசுவைக் காணவேண்டும் என கிரேக்கர்கள் வெளிப்படுத்திய விருப்பமானது, பல்வேறு காலங்களில், ஆண்களும், பெண்களும், திருஅவையை நோக்கியும், நம்மை நோக்கியும், இயேசுவைக் காண விழைந்து எழுப்பிவரும் விருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறது, என ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த சில வாரங்களாக புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தையொட்டி உள்ள மாடி அறை சன்னலிலிருந்து மூவேளை செப உரையை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலை மீண்டும் ஒருமுறை தடுப்பதற்கென இத்தாலிய அரசு, உரோம் நகரில் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, இஞ்ஞாயிறு நண்பகல் உரையை தன் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின வழியே வழங்கினார்.

கிரேக்கர்கள் இயேசுவின் சீடர் பிலிப்புவை அணுகி, இயேசுவை சந்திக்க தங்கள் விருப்பத்தை வெளியிட்டதையும், பிலிப்புவோ அதனை அந்திரேயாவிடம் எடுத்துரைத்து பின்னர் அதனை இயேசுவிடம் கூறியதையும் பற்றி உரைக்கும் ஞாயிறு நற்செய்தி வாசகம் (யோவான்  12:20-33) குறித்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவை சந்திக்க விரும்பும் பலர், எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் வெளியிட்டுவரும் ஆவலைக் காட்டுவதாக இந்நிகழ்வு உள்ளது என்று கூறினார்.

கிரேக்கர்களின் ஆவலுக்கு இயேசு உரைத்த பதிலோ, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விடையாக இல்லாமல், மண்ணில் மடியும் விதைக் குறித்தும், சிலுவையை உற்றுநோக்குவது குறித்தும் விடப்படும் அழைப்பாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் கிறிஸ்துவைக் காணவரும் மக்கள், முதலில் காண்பது சிலுவையையே, ஏனெனில், அதுவே அன்பையும், சேவையையும், முற்றிலுமாக தன்னையே கையளிப்பதையும் உள்ளடக்கும் வாழ்வின் மரமாக உள்ளது என எடுத்துரைத்தார்.

இன்றும் எண்ணற்ற மக்கள் வெளிப்படையாக சொல்லாமலேயே இயேசுவைக் காணவும், சந்திக்கவும், அவரைக் குறித்து அறியவும் கொண்டுள்ள விருப்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது, கிறிஸ்தவர்களாகிய நம் கடமையை நமக்கு உணர்த்துகின்றது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கு நாம் வழங்கும் பதிலுரை, சேவைகள் வழியாக நாம் வழங்கும் வாழ்வுச் சான்றுகளாக இருக்கவேண்டும் என மேலும் விளக்கிக் கூறினார்.

எளிமையான, மனவுறுதியுடைய சான்றுகளாக இருந்து, அன்பின் விதைகளை நாம் விதைக்கும்போது, இறைவன், நம்மை, மிகுந்த பலன் கொடுப்பவர்களாக மாற்றுகிறார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

துன்ப துயரங்களில் விதை மடியும்போது, அங்கு வாழ்வு மலர்கின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வும், மரணமும், ஒன்றிணையும் இந்நேரத்தில்தான், நாம், அன்பின் உண்மை கனிகளையும், மகிழ்வின் அனுபவங்களையும் பெறமுடியும் என மேலும் உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2021, 12:31

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >