புனித யோசேப்பிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித யோசேப்பிடம் செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித யோசேப்பு, இறையழைத்தல்களின் பாதுகாவலர்

“புனித யோசேப்பு: இறையழைத்தலின் கனவு” என்ற தலைப்பில், 58வது உலக இறையழைத்தல் நாளுக்கென்று (ஏப்ரல் 25,2021) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய செய்தி, மார்ச் 19, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 19, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பின் பெருவிழாவன்று, “புனித யோசேப்பு: இறையழைத்தலின் கனவு” என்ற தலைப்பில், இவ்வாண்டு இறையழைத்தல்களுக்காக இறைவேண்டல் செய்யும் 58வது உலக நாளுக்கென்று, செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித யோசேப்பு, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, அந்த புனிதருக்கென்று ஒரு சிறப்பு ஆண்டை தான் அர்ப்பணித்திருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இப்புனிதர் ஓர் அசாதாரண மனிதர், அதேநேரம், நம் மனித அனுபவங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர் என்று கூறியுள்ளார்.

அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் வாழ்வை வழங்கவும், அதை பிறப்பிக்கவும் வல்லமையுடைய ஒரு தந்தையின் இதயத்தை, கடவுள், புனித யோசேப்பில் பார்த்தார், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு, குறிப்பாக, இந்த பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் துன்பக்காலத்தில், இத்தகையப் பண்புகள் அதிகம் தேவைப்படுகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

வருகிற ஏப்ரல் 25ம் தேதி சிறப்பிக்கப்படும், உலக இறையழைத்தல் நாளுக்கென்று திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், கனவு, பணி, பிரமாணிக்கம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை, நம் ஒவ்வொருவரின் இறையழைத்தலுக்கு, புனித யோசேப்பு, பரிந்துரைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

புனித யோசேப்பின் நான்கு கனவுகள்

நற்செய்தி நூலில் கூறப்பட்டுள்ள புனித யோசேப்பின் நான்கு கனவுகளும் (காண்க. மத்.1:20; 2:13.19.22) கடவுளிடமிருந்து அவருக்கு கிடைத்த அழைப்பு என்றும், அந்த கனவுகள், அவரை, அவர் ஒருபோதும் கற்பனைசெய்து பார்த்திராத அனுபவங்களுக்கு இட்டுச் சென்றன என்றும், இவை அனைத்தும் ஏற்படுத்திய மனக்கிளர்ச்சிகளுக்கு மத்தியிலும், கடவுளின் விருப்பத்தைப் பின்பற்ற அவர் துணிவைக் கண்டார் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கனவு, புனித யோசேப்பு, மரியாவோடு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தபோதே, அவரை மெசியாவுக்குத் தந்தையாக்கியது, இரண்டாவது கனவு, அவர் எகிப்துக்குச் செல்லக் காரணமானது, அதேநேரம் தன் குடும்பத்தை அது காப்பாற்றியது, மூன்றாவது கனவு, தன் சொந்த ஊருக்குத் திரும்பச் சொன்னது, நான்காவது கனவு, அவரது திட்டத்தை மீண்டும் மாற்றி நாசரேத்துக்கு அழைத்துச் சென்றது.

கனவு காணுதல்

ஒவ்வொருவரின் தனிப்பட்ட இறையழைத்தலுக்கு, கனவு காணுதல் முக்கியம் என்பதை பரிந்துரைக்கும் புனித யோசேப்பு, கனவுகள் வழியாகவே, அவர் தன் வாழ்வை ஒரு கொடையாகக் கொடுக்குமாறு, கடவுள் அவரில் தூண்டுதலை எழுப்பினார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

அதேபோல் நம் அழைத்தலிலும், முதல் அடி எடுத்து வைக்கவும், நம்மையே வழங்கவும், முன்னோக்கிச் செல்லவும், கடவுள் நம்மை எப்போதும் தூண்டுகிறார் என்று கூறியுள்ள திருத்தந்தை, நம் திட்டங்களையும், வசதிகளையும் கைவிட்டு, இறையருளில் நம்பிக்கை வைத்து, நம்மை முழுமையாகக் கையளித்தால் மட்டுமே, “ஆகட்டும்” என்று, உண்மையிலேயே கடவுளுக்கு, நம்மால் கூறமுடியும் என்று கூறியுள்ளார்.

கடவுளின் திட்டங்களை ஏற்பதில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் இருப்பவர் புனித யோசேப்பு என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும், குறிப்பாக, தங்களின் அழைப்பை தெளிந்து தேர்வுசெய்யும் இளையோர், தங்களுக்காக கடவுள் அமைத்துள்ள கனவுகளை உண்மையாக்க புனித யோசேப்பு உதவுவாராக என்றும், எப்போதும் விந்தைகளை ஆற்றுகின்ற, மற்றும், ஒருபோதும் ஏமாற்றாத ஆண்டவருக்கு, “ஆகட்டும்” என்று சொல்வதற்கு, அப்புனிதர் அவர்களில் துணிச்சலைத் தூண்டுவாராக என்றும் கூறியுள்ளார்.

புனித யோசேப்பு
புனித யோசேப்பு

பணி

நம் இறையழைத்தல் பயணத்தில் புனித யோசேப்பு பரிந்துரைக்கும் மற்றொரு அம்சம் பணி என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்புனிதர் தன் வாழ்வு முழுவதும், தனக்காக அல்ல, மற்றவருக்காகவே எவ்வாறு வாழ்ந்தார் என்பதை நற்செய்தி நூல் நமக்குக் காட்டுகிறது என்றும், அனைத்து தன்முனைப்பு அன்பிலிருந்து வாழ்வை விடுவித்ததன் வழியாக, அவர் மிகவும் பலனுள்ள பணிக்குத் திறந்த மனதுடன் தன்னை கையளிப்பவராய் மாறினார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தன்னையே வழங்குதல் 

உண்மையான இறையழைத்தல் ஒவ்வொன்றும், தன்னையே வழங்குவதிலிருந்து பிறக்கவேண்டும், இதுவே பக்குவப்பட்ட தியாகத்தின் கனி என்றும், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வுக்கு, இத்தகைய பக்குவம் அவசியம் என்றும், திருமணமோ, கன்னிமை வாழ்வோ எந்த அழைப்பாக இருந்தாலும், தன்னையே வழங்குவதாக அமையவேண்டும் என்றும், திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

புனித யோசேப்புக்கு, பணி என்பது, தன்னையே வழங்குவதன் தெளிவான வெளிப்பாடாக உள்ளது என்றும், அது வெறும், உயரிய கருத்தியல்களில் நின்றுவிடுவதில்லை, மாறாக, அது அன்றாட வாழ்வின் விதிமுறையாக மாறுகிறது என்றும், இவ்வாறு வாழ்ந்ததன் வழியாக, இப்புனிதர், தன் வாழ்வில் அடிக்கடியும், எதிர்பாராத நேரங்களிலும் இடம்பெற்ற பயணங்களை வரவேற்றார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, மற்றும், திருஅவையின் பாதுகாவலரான புனித யோசேப்பை, இறையழைத்தல்களின் பாதுகாவலராக நான் நினைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பிரமாணிக்கம்

புனித யோசேப்பின் தினசரி வாழ்வு, மற்றும், நம் கிறிஸ்தவ அழைப்பை குறிக்கும் மூன்றாவது பண்பு பிரமாணிக்கம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, புனித யோசேப்பு “நேர்மையாளர்” (மத்.1:19), இவர் எதிலும் அவசரப்படாமல், எல்லாவற்றையும் பொறுமையோடு சிந்தித்தவர், மற்றும், வாழ்வின் வெற்றி, முக்கியமான தீர்மானங்களுக்கு பிரமாணிக்கமாய் இருப்பதில் கட்டப்படுகின்றது என்பதை அறிந்தவர் என்று கூறியுள்ளார்.

இத்தகைய பிரமாணிக்கம், கடவுளின் பிரமாணிக்கத்தின் ஒளியில் பேணி வளர்க்கப்படுகின்றது என்றும், “யோசேப்பே, தாவீதின் மகனே, அஞ்ச வேண்டாம்” (மத் 1:20)  என்ற அழைப்பே, புனித யோசேப்பு தன் கனவில் முதலில் கேட்ட சொற்கள் என்றும், கடவுள் தன் வாக்குறுதிகளுக்கு எப்போதும் பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நிச்சயமற்றநிலை மற்றும், தயக்கம் ஆகியவற்றின் மத்தியிலும்கூட, கடவுளுக்கு தன் வாழ்வை அர்ப்பணிக்க ஏற்படும் ஆவலை தாமதிக்கத் தேவையில்லை, ஏனெனில் அஞ்சவேண்டாம் என்ற சொற்களையே ஆண்டவர் இளையோரிடமும் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரமாணிக்கமாக இருப்பது, மகிழ்வின் இரகசியம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நாசரேத் திருக்குடும்பத்தில் இருந்த வெளிப்படையான மகிழ்வுச் சூழல், நம் அருள்பணித்துவ பயிற்சி இல்லங்கள், துறவு இல்லங்கள் மற்றும், அருளபணியாளர் இல்லங்களில் ஒளிரவேண்டும் என்ற தன் ஆவலையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அருள்பணித்துவ திருப்பொழிவு
அருள்பணித்துவ திருப்பொழிவு

இறையழைத்தல்களின் பாதுகாவலராகிய புனித யோசேப்பு, தன் தந்தைக்குரிய இதயத்தோடு உங்களோடு உடன்வருவாராக என்று, தனது 58வது உலக இறையழைத்தல் நாளுக்குரிய செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுசெய்துள்ளார்.   

நல்லாயன் ஞாயிறு என அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கத் திருஅவையில், இறையழைத்தல்களுக்காகச் இறைவேண்டல் எழுப்பும் உலக நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2021, 12:11