திருக்குடும்பம் திருக்குடும்பம்  

'தயவுகூர்ந்து', 'நன்றி', 'வருந்துகிறேன்', என்ற சொற்களின் சக்தி

திருத்தந்தை : எந்த ஒரு நாளையும் சமாதானமின்றி முடிவுக்குக் கொணராதீர்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பங்களில் அமைதியும், மகிழ்வும் நீடித்து நிலைக்க உதவும் மூன்று வார்த்தைகளின் அவசியம் குறித்து டிசம்பர் 27, இஞ்ஞாயிறு, திருக்குடும்ப திருவிழா நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சனைகள் உள்ளன, அதைத் தொடர்ந்து சண்டை சச்சரவுகளும் இருக்கலாம், ஆனால், எந்த ஒரு நாளையும் சமாதானமின்றி முடிவுக்குக் கொணராதீர்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'தயவுகூர்ந்து', 'நன்றி', 'மனம் வருந்துகிறேன்', என்ற மூன்று சொற்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த மூன்று சொற்களும் ஒரு குடும்பத்தில் இருந்தால், அந்த குடும்பம் மகிழ்வு நிறைந்ததாக இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும், 2015ம் ஆண்டு, குடும்பங்களை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு விழாவன்று, தன்னால் வெளியிடப்பட்ட திருத்தூது அறிவுரைமடல், 'Amoris laetitia' பற்றியும் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Amoris laetitia திருத்தூதுமடலை ஆழமாக தியானித்து சிந்திக்க, வரும் ஆண்டு நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது குறித்த ஆழமான சிந்தனைகளுக்கு உதவும்வகையில் வழிகாட்டிகள், திருஅவை சமுதாயங்களுக்கும், குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறினார்.

இத்திருத்தூது மடல் குறித்து ஆழமாக சிந்திக்க வாய்ப்பை வழங்க உள்ள, வரும் ஆண்டில், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குரிய திருப்பீட அவை, பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும், தன் நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2020, 15:22