மூவேளை செபவுரையின்போது, வளாகத்தில் ஒரு குழந்தை -131220 மூவேளை செபவுரையின்போது, வளாகத்தில் ஒரு குழந்தை -131220 

குழந்தை இயேசு திருஉருவங்களை ஆசீர்வதித்த திருத்தந்தை

திருத்தந்தை - இயேசுவுக்கு அருகாமையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தங்கள் இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்படும் குழந்தை இயேசு திருவுருவங்களை கையில் ஏந்தி  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த குழந்தைகள், மற்றும், கொள்ளை நோய் விதிமுறைகள் காரணமாக தங்கள் பங்குகளின் இளையோர் மையங்களிலும், வீடுகளிலும் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியே மூவேளை செப உரையில் கலந்துகொள்ளும் சிறார்களுக்கும் தன் ஆசீரை வழங்குவதாக உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்படும் குழந்தை இயேசு திருஉருவச் சிலைகளை வழக்கமாக, ஞாயிறு மூவேளை செபஉரையின்போது திருத்தந்தை ஆசிர்வதிக்கும் நிலையில், இவ்வாண்டு, கொள்ளைநோய் காரணமாக, புனித பேதுரு வளாகத்திற்கு வரமுடியாமல், வீடுகளிலும், பங்கு மையங்களிலும், குழந்தை இயேசு திருஉருவத்துடன் காத்திருக்கும் குழந்தைகள் அனைவரையும் சமூகத்தொடர்பு சாதனம் வழியாக ஆசிர்வதிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

நம்பிக்கை, மற்றும், மகிழ்வின் அடையாளமாக, கிறிஸ்து பிறப்பு குடில் ஒவ்வொன்றிலும்  வைக்கப்பட உள்ள குழந்தை இயேசு திருஉருவங்களை தான் வத்திக்கானிலிருந்தே ஆசிர்வதிப்பதாக உரைத்த திருத்தந்தை, குடும்பத்தோடு, கிறிஸ்மஸ் குடில் முன்னர் செபிக்கும்போது, நமக்கு அன்பை வழங்கவேண்டும் என்பதற்காக, ஏழையாகவும், வலுவற்றவராகவும் பிறந்த குழந்தை இயேசுவின் கனிவால் கவரப்பட்டு, அவர் அருகில் செல்வோம் என கேட்டுக்கொண்டார்.

இயேசுவுக்கு அருகாமையில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தங்கள் இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக உள்ளனர் எனக்கூறி, தனக்காக செபிக்குமாறு வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2020, 12:59