மொசாம்பிக்கில் இளையோருடன் திருத்தந்தை மொசாம்பிக்கில் இளையோருடன் திருத்தந்தை 

கிறிஸ்து அரசர் விழாவன்று இளையோர் நாள் கொண்டாட்டங்கள்

திருத்தந்தை : கிறிஸ்து வாழ்ந்து ஆட்சிபுரிகிறார் என்பதை உங்கள் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக உரக்க கூக்குரலிட்டு அறிவியுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், மறைமாவட்டங்களில் சிறப்பிக்கப்படும் இளையோர் நாள் கொண்டாட்டங்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் விழா திருப்பலியின் இறுதியில் விடுத்தார், திருத்தந்தை  பிரான்சிஸ்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள் ஏதாவது ஒரு நகரில் திருத்தந்தையின் பங்கேற்புடன் நடைபெற்றுவரும் நிலையில், அதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில், மறைமாவட்ட அளவில், இதவரை, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டுவந்த இளையோர் நாள் கொண்டாட்டங்கள், வரும் ஆண்டிலிருந்து, கிறிஸ்து அரசர் விழாவன்று சிறப்பிக்கப்படும் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2019ம் ஆண்டு பானமா நாட்டில் உலக இளையோர் நாள் நிகழ்ந்ததையொட்டி அங்கு கொண்டுசெல்லப்பட்ட உலக இளையோர் நாள் சிலுவையை, பானமா இளையோர், போர்த்துக்கல் இளையோரிடம் ஒப்படைத்த சடங்கிற்கு முன் இவ்வறிவிப்பை விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்து வாழ்ந்து ஆட்சிபுரிகிறார் என்பதை உங்கள் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக உரக்க கூக்குரலிட்டு அறிவியுங்கள் என, இளையோருக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2022ம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இடம்பெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, 2023ம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2021, மற்றும், 2022ம் ஆண்டுகளில், மறைமாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் நாள் கொண்டாட்டங்கள், அவ்வாண்டுகளின் கிறிஸ்து அரசர் விழாவன்று சிறப்பிக்கப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2020, 15:00