நண்பகல் மூவேளை செபவுரையின்போது - 291120 நண்பகல் மூவேளை செபவுரையின்போது - 291120 

நம்பிக்கைக்கு தொடர் அழைப்புவிடுக்கும் காலம் இது

இவ்வுலக இறுதி நாளில் வரவிருக்கும் இறைவன், அவரின் அருளை வழங்குவதற்கென, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்பிக்கைக்கு தொடர்ந்து அழைப்புவிடுக்கும் காலம் திருவருகைக்காலம் என்ற கருத்துடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய கர்தினால்களுடன் திருவழிபாட்டு ஆண்டின் முதல் ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலிக்குப்பின், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக நம்மை தயாரிக்கும் இக்காலத்தில்,  எதிர்பார்ப்பு, மற்றும் நம்பிகையுடன் செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார்.

இயேசுகிறிஸ்துவுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்பை நோக்கி நம் கவனத்தைத் திருப்புவோம் என கொரிந்து கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் அழைப்புவிடுக்கும் புனித பவுல், இறை அருளின் உதவியுடன் நம் வாழ்விலும், மற்றவர்களின் வாழ்விலும் நன்மைத்தனங்களை மேற்கொள்ள முயல்வோம் எனவும் கேட்கிறார், என்றார் திருத்தந்தை.

இவ்வுலக இறுதி நாளில் வரவிருக்கும் இறைவன், அவரின் அருளை வழங்குவதற்கென, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறார் எனவும் எடுத்தியம்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக்காலத்தில் நாம், இயேசுவின் வாழ்விலும், மீட்பு வரலாற்றிலும் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்து கொண்டாடுகிறோம், என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் தாய் திருஅவை, நம் தினசரி வாழ்வில் உதவுவதுடன், கிறிஸ்துவுடன் ஆன இறுதி சந்திப்பை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது  எனவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2020, 13:20