ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, ஆயர் Raphy Manjaly
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, அலகாபாத் மறைமாவட்டத்தின் ஆயர் Raphy Manjaly அவர்களை, நவம்பர் 12 இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியமித்துள்ளார். ஆக்ரா பேராயராகப் பணியாற்றிவந்த ஆல்பர்ட் டி'சூசா அவர்கள் ஒய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அப்பொறுப்பில், ஆயர் Raphy Manjaly அவர்களை நியமித்துள்ளார்.
2007ம் ஆண்டு ஆக்ரா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக பொறுப்பேற்ற, ஆல்பர்ட் டி'சூசா அவர்கள், 13 ஆண்டுகள் பணிக்குப் பின், தன் 76வது வயதில், பணி ஒய்வு பெறுகிறார்.
63 வயதான ஆயர் Raphy Manjaly அவர்கள், 2007ம் ஆண்டு வாரணாசி மறைமாவட்டத்தின் ஆயராகவும், பின்னர், 2013ம் ஆண்டு அலகாபாத் மறைமாவட்டத்தின் ஆயராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், நவம்பர் 15 வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 4வது உலக வறியோர் நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 12 இவ்வியாழனன்று, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
"நலிவுற்றோருக்கு ஆதரவளிப்பது, துன்புறுவோரை தேற்றுவது, வேதனையை நீக்குவது, மாண்பு நீக்கப்பட்டோரின் மாண்பை மீண்டும் தருவது ஆகியவற்றில் நாம் காட்டும் தாராள பண்பு, நாம் முழு மனித வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்