புனிதர் வழிமுறை பேராயத்தின் புதிய தலைவர் - ஆயர் Marcello Semeraro புனிதர் வழிமுறை பேராயத்தின் புதிய தலைவர் - ஆயர் Marcello Semeraro 

புனிதர் வழிமுறை பேராயத்திற்கு புதிய தலைவர்

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவைக்கு புதிய செயலரும், புதிய உறுப்பினரும் நியமனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் முன்னாள் தலைவர், கர்தினால் Giovanni Angelo Becciu அவர்கள் பதவி துறந்ததை முன்னிட்டு, இத்தாலியின் உரோம் நகருக்கு அருகேயுள்ள அல்பானோ மறைமாவட்ட ஆயரும், திருத்தந்தைக்கு ஆலோசனைகளை வழங்கும் C-6 கர்தினால்கள் அவையின் செயலருமான ஆயர் Marcello Semeraro அவர்களை, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவராக, இவ்வியாழனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து இறந்தவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கென, உலகின் தலத்திருஅவைகளிலிருந்து வரும் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அவர்களின் பெயர்களை, திருத்தந்தைக்கு முன்வைப்பது, இத்திருப்பேராயத்தின் பணியாக  அமைந்துள்ளது.

இதுவரை, கர்தினால்கள் ஆலோசனை அவையின் செயலராக பணியாற்றிவந்த ஆயர் Semeraro அவர்களுக்கு, புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவ்விடத்தில் ஆயர் Marco Mellino அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அதே கர்தினால்கள் ஆலோசனை அவையில் புதிய உறுப்பினராக, ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசின் Kinshasa பேராயர், கர்தினால் Ambongo Besungu அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆப்ரிக்காவிலிருந்து, இந்த ஆலோசனை அவையில், 2018ம் ஆண்டுவரை பணியாற்றிய கர்தினால் Laurent Monsengwo Pasinya அவர்களின் இடத்தில், தற்போது கர்தினால் Besungu அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2020, 14:54