மூவேளை செப உரை 060920 மூவேளை செப உரை 060920 

புறணிபேசுதல் கோவிட்-19 தொற்றுக்கிருமியைவிட மோசமானது

ஒரு குழுமத்தில், குற்றம்புரிந்த உறுப்பினர் ஒருவர் பற்றி புறணிபேசுகையில், அது அந்த குழுமத்தின் ஒற்றுமையை புண்படுத்துகிறது, ஏனென்றால், சாத்தானே, மாபெரும் புறங்கூறுபவர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உடன்பிறந்த உணர்வுடன் மேற்கொள்ளப்படும் குறைதிருத்தம், திருஅவையைக் கட்டியெழுப்பும், மாறாக, புறணிபேசுதல், அதைத் தகர்த்தெறியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 06, இஞ்ஞாயிறு, மூவேளை செப உரையில், திருஅவை குழுமத்தின் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில், கூடியிருந்த மக்களுக்கு, உடன்பிறப்புக்களுக்கிடையே நிலவும் குறைதிருத்தம் பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத்.18:15-20) மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த நற்செய்தி பகுதி, கிறிஸ்தவ வாழ்வின் இரு கூறுகள் பற்றி சிந்திப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

முதலாவது, குழுமத்தில் ஒன்றிப்பைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது, இரண்டாவது, தனிப்பட்ட வாழ்வைச் சார்ந்தது, அதாவது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் மனச்சான்றின் மீது கவனம் செலுத்தவும் மதிக்கவும் வலியுறுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு, பாவம்புரிந்த நம் சகோதரர் அல்லது சகோதரியைத் திருத்துவதற்கு, மூன்று படிமுறைகளை நமக்கு வழங்குகின்றார் என்று கூறினார்.

படிமுறை 1: விவேகத்துடன் எச்சரிக்கை விடுத்தல்

பாவம்புரிந்த சகோதரர் ஒருவரைத் தீர்ப்பிடாமல், அவர் தன் தவறை உணர உதவிசெய்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த முதல் முயற்சியை மேற்கொள்வது எளிதல்ல, ஏனென்றால், அந்த சகோதரர், நாம் சொல்வதற்கு எதிர்மாறாகச் செயல்படலாம், சில நேரங்களில், அவர் மீது நமக்குப் போதுமான நம்பிக்கை இல்லாதிருக்கலாம். அல்லது, வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று விளக்கினார்.  

படிமுறை 2: உதவி கேட்பது

பாவம்புரிந்த அந்த சகோதரர் மனம் வருந்தாதபோது, நாம் மற்ற சகோதரர் சகோதரிகளின் உதவியை நாடவேண்டும் என்று இயேசு கூறுகிறார் என்று விளக்கிய திருத்தந்தை,  இந்த இரண்டாவது முயற்சி, மோசே சட்ட விதிகளிலிருந்து மாறுபட்டது, ஏனென்றால், யாரையாவது தீர்ப்பிடவேண்டும் எனில், இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் தேவை என்று மோசே சட்டம் கூறுகிறது என்றும், இயேசு பரிந்துரைக்கும் இரு சாட்சிகள், குற்றம் சுமத்தவும், தீர்ப்பிடவும் அல்ல, மாறாக, உதவிசெய்ய அழைக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.

படிமுறை 3: திருஅவையிடம் கூறுதல்

யாராவது தான் செய்த குற்றத்தில் உறுதியாய் இருந்தால், அந்த விவகாரத்தை திருஅவையிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சகோதரர் சகோதரிகள் மீது நல்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள் உள்ளன என்றும், தவறிழைத்த ஓர் உடன்பிறப்பை புதிய நிலைக்குக் கொண்டுவர, மிகுந்த அன்பு தேவை என்றும் கூறினார்.

இறுதி முயற்சி

சில நேரங்களில் திருஅவையின் தலையீடும் தோல்வியடையலாம், அவ்வேளையில், அந்த மனிதர் அந்நியராக, புறவினத்தார் போன்று நடத்தப்படவேண்டும் என்று இயேசு உரைக்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு நடத்துவது, அந்த மனிதரை இழிவுபடுத்துவதாக இருக்கலாம், உண்மையில், இத்தகைய கடும் நடவடிக்கையின்போது, அந்த சகோதரரை கடவுளின் கரங்களில் ஒப்படைக்கவேண்டும், ஏனென்றால், மற்ற அனைத்து சகோதரர் சகோதரிகள் காட்டும் அன்பைவிட மிகப்பெரும் அன்பைக் காட்டவல்லவர், இறைத்தந்தை ஒருவர் மட்டுமே என்று எடுத்துரைத்தார்.

புறணிபேசுதல் குழுமத்தை புண்படுத்துகிறது

குழுமத்தில், குற்றம்புரிந்த உறுப்பினர் ஒருவரை, உடன்பிறந்த உணர்வுடன் திருத்தும் பாதையைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அவரைப்பற்றி புறணிபேசுகையில், அது அந்த குழுமத்தின் ஒற்றுமையை புண்படுத்துகிறது, ஏனென்றால், சாத்தானே, மாபெரும் புறங்கூறுபவர் என்று திருத்தந்தை கூறினார்.

புறணிபேசுதல் கோவிட்-19 தொற்றுக்கிருமியைவிட மோசமானது, எனவே புறணிபேசாமல் இருப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  உடன்பிறந்த உணர்வுடன் குறைகளைத் திருத்துவதற்கு, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்று சொல்லி, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2020, 12:30