நற்செய்தி வாசித்தல் நற்செய்தி வாசித்தல்  

விசுவாசம் என்பது, கடவுளை நோக்கி நம் இதயத்தைத் திருப்புவது

முழு நிறைவை நோக்கிய தேடுதலுடன் பிறந்துள்ள நம் இதயம், இயேசுவைச் சந்திக்கும் அந்த வேளையில்தான், அருளின் வாழ்வை, தன்னில் துவக்குகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறந்தது முதல்,  வாழ்வில் நிறைவைத் தேடிக்கொண்டிருக்கும் நாம், இயேசுவைச் சந்திக்கும்போது, வாழ்வின் அருள் துவங்குவதைக் காண்போம், என்ற கருத்தை, ஆகஸ்ட் 10, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“முழு நிறைவை நோக்கியத் தேடுதலுடன், நிறைவுதராத உணர்வு என்ற விதையுடன், நாம் பிறந்துள்ளோம். நாம் அறியாமலேயே, இறைவனைச் சந்திக்கும் தாகம் கொண்டுள்ள நம் இதயம், பல வேளைகளில், தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. நம் நிறைவுதராத உணர்வு, இயேசுவைச் சந்திக்கும்போது, அருளின் வாழ்வு நம்மில் துவங்குகிறது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், இஞ்ஞாயிறன்று, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், “வாழ்வில் புயல் வீசும் வேளையில், கடவுளை நோக்கியும், அவர் அன்பை நோக்கியும், அவரின் கனிவான அக்கறையை நோக்கியும், நம் இதயத்தைத் திருப்புவதே விசுவாசம். தூய பேதுருவுக்கும் ஏனைய சீடர்களுக்கும் இதனை உணர்த்த விரும்பிய இயேசு, இன்று நமக்கும் அதையே கற்றுத் தருகிறார்” என்ற சொற்களை, பதிவு செய்திருந்தார்.

“நாம் மீண்டும் லெபனான் நாட்டிற்காகச் செபிப்போம். பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பில் உருவான கனியாகிய, அதன் தனித்துவ அடையாளம், கடவுளின் உதவியுடனும், ஒவ்வொருவரின் உண்மையான பங்கேற்புடனும் சுந்திரமாக, சக்திமிக்கதாக மறுபிறப்படைய செபிப்போமாக” என்ற சொற்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப விண்ணப்பம் ஒன்றை, தன்  இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2020, 13:58