துறவற அருள்சகோதரிகள் துறவற அருள்சகோதரிகள் 

பிரேசில் நாட்டில் அர்ப்பண வாழ்வு வாரம்

திருத்தந்தை : கடவுளின் அருளுக்கு மாற்றாக வேறு ஒன்றைத் தேடும் சோதனைகளை நாம் ஒவ்வொருவரும் தவிர்க்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 16ம் தேதி, இஞ்ஞாயிறு முதல், வரும் சனிக்கிழமை வரை, அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வின் வாரத்தை சிறப்பித்துவரும் பிரேசில் நாட்டின் துறவியர் அவைக்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொருவரின் மறைப்பணி வாழ்வை புதுப்பித்தல், மற்றும், ஊக்குவித்தல் என்ற நோக்கத்துடன் இடம்பெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வு வாரத்திற்கென செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்மை அன்புகூரும் அனுபவத்துடன் துவங்கும் இறையழைத்தல் பயணம், இறைவன் நம்மோடு இணைந்து நடைபோடுவதை உணர்வதுடன் தொடர்கிறது என அதில் கூறியுள்ளார்.

மாறிவரும் இன்றைய உலகின் நிலைகளுக்கு ஏற்ப, கடவுளின் அருளுக்கு மாற்றாக வேறு ஒன்றைத் தேடும் சோதனைகளை நாம் ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும் என, தன் செய்தி வழியே அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய சோதனைகளை வெற்றிகொள்ள தேவைப்படும் முதல் எதிர்ப்பு மருந்து, செபமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட துறவற வாழ்வை மேற்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வை மேம்படுத்தவும் புதுப்பிக்கவும் வேண்டுமெனில், நம் ஒரே அன்பாகவும், முதன்மை அன்பாகவும் இயேசு இருக்கிறாரா என்பதை அடிக்கடி நமக்குள்ளேயே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தையும் தன செய்தியில் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2020, 14:09