துன்புறுவோர் இயேசுவின் இதயத்தால் தொடப்பட...

துன்புறுவோர் அனைவரும், தங்களுக்குரிய வாழ்வின் வழியைக் கண்டுணரவும், இயேசுவின் இதயத்தால் தொடப்பட, தங்களையே அனுமதிக்கவும், இந்த ஜூன் மாதத்தில் மன்றாடுவோம் – திருத்தந்தையின் செபக்கருத்து

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகின் பல பகுதிகளில், கோவிட்-19 கொள்ளைநோய் தொடர்ந்து பரவிவரும்வேளை, அனைத்துவிதமான துன்பங்களாலும் பாதிக்கப்பட்டோரை மறவாது, இறைவேண்டல் செய்யுமாறு, ஒரு காணொளிச் செய்தி வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 4, இவ்வியாழன் மாலையில், ஜூன் மாதச் செபக்கருத்து பற்றி காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,. பல்வேறு முறைகளில் துன்புறுவோர் அனைவரும், இயேசுவின் இதயத்தால் தொடப்பட தங்களை அனுமதிக்கும் ஒரு வாழ்வுமுறையைக் கண்டுணரும்படியாக, இறைவனை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

கவலை, துன்பம், இன்னல் போன்றவை எங்கெல்லாம் நிலவுகின்றதோ, அங்கெல்லாம், எப்போதும் முதலில் பிரசன்னமாக இருப்பது இயேசுவின் இதயம் என்றும், இந்த உலகில் எவருமே தன்னந்தனியாக இல்லை என்றும், நம் அனைவருக்கும் தேவையான மற்றும், உதவுகின்ற ஒரு பாதை உள்ளது என்றும், அந்தப் பாதை, இயேசுவின் இதயத்தோடு நம்மை இணைக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த உலகில், மக்கள், கருணை என்ற பணியை ஆற்ற, இயேசுவின் இதயம் அவர்களை வழிநடத்திச் செல்கின்றது என்றும், இயேசுவின் இதயம் காட்டும் இந்தப் பாதையில் நாம் செல்வதற்கு முயற்சிக்கவேண்டும், ஏனெனில், கனிவு என்ற புரட்சிப்பாதையில் நம்மை ஈடுபடுத்த அந்த இதயம் தயாராக இருக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்

துன்புறுவோர் அனைவரும், தங்களுக்குரிய வாழ்வின் வழியைக் கண்டுணரவும், இயேசுவின் இதயத்தால் தொடப்பட, தங்களையே அனுமதிக்கவும் ஜூன் மாதத்தில் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இயேசுவின் இதய பக்தி

17ம் நூற்றாண்டில், பிரான்ஸ் நாட்டில், புனித Margaret Mary Alacoque அவர்களுக்கு, இயேசுவின் இதயம் பலமுறை காட்சிகொடுத்தது. இயேசு சபை அருள்பணி புனித Claude La Colombière அவர்கள், இப்புனிதர் கண்ட காட்சிகளை உலகறியச் செய்தார். அதன் விளைவாக, கத்தோலிக்க உலகில் இயேசுவின் திருஇதய பக்தி பரவியது.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 1920ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி, புனித Margaret Mary Alacoque அவர்களை, புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேவண்ணம், 1992ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், Claude La Colombière அவர்களை புனிதராக உயர்த்தினார். புனித Alacoque அவர்கள், புனிதராக உயர்த்தப்பட்ட நிகழ்வின் நூற்றாண்டு விழா இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகின்றது.

19ம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் புனித Faustina Kowalska அவர்களுக்கு, இயேசுவின் இதயம் காட்சிகொடுத்தது. அதன் பயனாக, 20ம் நூற்றாண்டில் இறை இரக்க பக்தி பரவியது. திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1956ம் ஆண்டில், இயேசுவின் இதயம் பற்றிய Haurietis aquas எனப்படும் திருமடலை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2020, 12:22