திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை -130420 திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை -130420 

விசுவாசத்தின் வியத்தகு எடுத்துக்காட்டுகளாக விவிலிய பெண்கள்

இயேசுவின் உயிர்ப்பு குறித்து சீடர்கள் நற்செய்தியை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து, உலகின் கடைசி எல்லைவரை, அது நம்பிக்கையின் செய்தியாக மாறியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்  

கல்லறை காலியாக இருப்பதைக் கண்டு திகைத்த பெண்களிடையே தோன்றிய இயேசு, தான் கலிலேயாவில் சீடர்களைச் சந்திக்க உள்ளதை சீடர்களிடம் கூறுமாறு அறிவித்து, அவர்களிடம் மறைப்பணிக் கடமையை ஒப்படைத்ததை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என, ஏப்ரல் 13, இத்திங்கள் அல்லேலூயா வாழ்த்தொலி உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசத்தின் வியத்தகு எடுத்துக்காட்டாகவும், இயேசுவின் மீது கொண்ட அன்பு மற்றும் அர்ப்பணத்தின் அடையாளமாகவும் இயேசுவின் பணிக்காலத்தின்போதும், பாடுகளின்போதும், உறுதியுடன் செயல்பட்ட பெண்களுக்கு இயேசு வழங்கிய பரிசாக இந்த காட்சியளித்தலைக் காணமுடிகின்றது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்பு குறித்து சீடர்கள் நற்செய்தியை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து, உலகின் கடைசி எல்லைவரை அது நம்பிக்கையின் செய்தியாக மாறியுள்ளது என்ற திருத்தந்தை, உயிர்ப்பு நமக்குத் தரும் செய்தி என்னவெனில், இறுதி வார்த்தை என்பது சாவல்ல, மாறாக, வாழ்வேயாகும், என்பதே என்றார் .

திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரின் விசுவாசமும் பலம்பெறும்படியாகவும், துன்புறுவோர் ஊக்கம் பெறும்படியாகவும் உதவும் நோக்கத்தில், நம் நம்பிக்கையாம் கடவுள் உயிர்த்து விட்டார் என, நம் வாழ்வு வழியாக சான்று பகர்வோம்  எனவும், தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2020, 13:49