திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மார்ச் 13, இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், அருள்பணியாளர்களுக்காகச் செபிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள இந்நெருக்கடி காலத்தில், இறைமக்களுடன் உடன்பயணிக்க வேண்டிய மேய்ப்பர்களுக்காகச் செபிக்க விரும்புகிறேன், அம்மக்களுக்கு உதவுவதற்குச் சிறந்த வழிகளைத் தெரிவுசெய்ய, ஆற்றலையும், மனதிடத்தையும், ஆண்டவர் அவர்களுக்கு அருள்வாராக” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாள் காலை ஏழு மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியை, நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கு உதவியாக, யூடியூப் முகவரியையும், https://www.youtube.com/watch?v=fjj30U4ezEA டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வழங்கியுள்ளார்.
2வது, 3வது டுவிட்டர் செய்திகள்
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, #SantaMarta என்ற ஹாஷ்டாக்குடன், வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், கடவுள் நமக்கு வழங்கும் கொடை பற்றி எழுதியுள்ளார்.
“கடவுள் ஒரு கொடையாக, தம்மையே வெளிப்படுத்துகிறார், அவர் நமக்காக தம்மையே கொடையாக்கினார், அதை நாம் நம் உடமையாக அல்லாமல், கொடையாக, மற்றவர்க்கு வழங்கவேண்டும், அதை மற்றவர் அவ்வாறு பார்ப்பதற்கும் உதவ வேண்டும். வெளிப்பாட்டின் இவலசப் பண்பை மறவாதிருக்க ஆண்டவரிடம் அருள்வேண்டுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
திருத்தந்தை இவ்வெள்ளியன்று, #Prayer என்ற ஹாஷ்டாக்குடன், செபம் பர்றி, மூன்றவது டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார். நம்மை எப்போதும் பேணிக்காக்கும் கடவுளின் அன்புக்குப் பதில்சொல்லவேணடிய நம் தேவையின் வெளிப்பாடே செபம். தகுதியற்றவர்களாய் இருந்தாலும், நாம் அன்புகூரப்படுகிறோம் என்ற அறிவில் கிறிஸ்தவர்கள் செபிக்கின்றனர் என்ற சொற்கள், திருத்தந்தையின் 3வது டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்