புதன் மறைக்கல்வி உரை- 180320 புதன் மறைக்கல்வி உரை- 180320 

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்

புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற பக்தி முயற்சியை, ஏற்பாடு செய்து நடத்துகிறது. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுக்கு முந்திய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், மார்ச் 20, 21, அதாவது வருகிற வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில், ஆண்டவரோடு 24 மணி நேரமும் செபத்தில் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்கி, ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்று, உலகில் கொள்ளை நோய் பாதிப்பைத் தடுப்பதற்கு உதவுமாறு, விண்ணப்பம் ஒன்றை விடுத்தார். தவக்காலத்தில், இச்செப நேரத்தில், ஒப்புரவு அடையாளத்தை அணுகுங்கள், தொற்று நோய் பரவல் காரணமாக, செபிக்க முடியாத நாடுகளில் வாழ்வோர், தனிப்பட்ட செபங்கள் வழியாக இதற்கு உதவட்டும் எனவும் கூறினார், திருத்தந்தை.

கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும், இத்தாலி போன்ற நாடுகளில், இந்த 24 மணி நேர செபம், வழக்கம் போல் நடைபெற இயலாது எனினும், ஏனைய பகுதிகளில் இந்த அழகிய பாரம்பரியம் தொடரும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் ஒப்புரவு அருளடையாளத்தில் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, இந்த கொள்ளைநோயின் வேதனைகளை அனுபவிக்கும் மக்களுக்காக சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற பக்தி முயற்சியை, புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, ஏற்பாடு செய்து நடத்துகிறது. தவக்காலத்தின் நான்காம் ஞாயிறுக்கு முந்திய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரு நாள்களிலும், உலகிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஓர் ஆலயம், 24 நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இச்செப முயற்சியில், விசுவாசிகள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறவும், திருத்தந்தையுடன் ஆன்மீக ஒன்றிப்பில், செபிக்கவும் அழைக்கப்படுகின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:17