மூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள, திருத்தந்தை அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
நம் சுயநலப்பாதைகளை விட்டு வெளியே வந்து, இறைவன் மீதும் அயலவர் மீதும் கொண்ட அன்பால் நிரப்பபப்பட்டவர்களாக நாம் செயல்படவேண்டும் என, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“நம்மை நாமே திருப்திப்படுத்த இயலாது. மற்றவர் உதவிகளின்றி என்னால் வாழமுடியும் என்ற முகமூடியை கழற்றி எறியவேண்டும். மூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள வேண்டும். நமக்குள் எளிமையை வளர்த்து இறைவன் மீது கொண்ட ஆர்வத்தாலும், அயலவர் மீது கொண்டிருக்கும் அன்பாலும் நிரப்பப்பட்டவர்களாக நாம் பேரார்வத்துடன் செயல்படவேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இத்திங்களன்று இடம்பெற்றிருந்தன.
இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “சட்டத்தைக் கடைப்பிடிப்பதை ஒரு வழக்கமான முறையாகக் கொள்ளாமல், சட்டத்தை, மனதில் ஏற்று, ஆழமாக உணர்ந்து ஒழுகும் வாழ்க்கைமுறையாக மாற்றவேண்டும் என இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு ஊக்கமளிக்கிறார். நல்ல, மற்றும், தீய செயல்கள் இதயத்திலிருந்து வருகின்றன”, என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C6 என்ற கர்தினால்கள் அவையின் 33வது, 3 நாள் கூட்டம், திருத்தந்தையின் தலைமையில், பிப்ரவரி 17, இத்திங்களன்று திருப்பீடத்தில் துவங்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்